ஜெகதீப் தன்கர் ராஜினாமா! இந்தியாவின் அடுத்த துணை குடியரசுத் தலைவர் யார்? தேர்வு முறை எப்படி நடைபெறும்?
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 74 வயதான ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்து இருக்க கூடிய நிலையில், துணை குடியரசு தலைவர் தேர்வு முறை எப்படி நடைபெறும். இதற்கான விதிகள் என்ன? தேர்தலில் யார் வாக்களிக்க முடியும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
நாட்டின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று, உடல்நலப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி, திடீரென தன் பதவியில் இருந்து விலகினார். இந்திய அரசியலமைப்பின் 67 (a) பிரிவின் கீழ், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

அடிப்படைத் தகுதிகள் என்னென்ன?
இந்த ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் பதவி காலியாகியுள்ளது. புதிய குடியரசு துணைத் தலைவர் தேர்தல் எப்போது நடைபெறும்? எப்படி நடைபெறும்? என்பது குறித்தும் இதற்கான விதிகள் என்ன? என்பது பற்றியும் பார்க்கலாம்..
* குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
* குறைந்தபட்சம் 35 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
* மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
* எந்தவொரு அரசுப் பதவியிலும் அவர் இருக்கக் கூடாது. இதுவே குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான அடிப்படைத் தகுதிகளாகும்.
பொறுப்பு குடியரசுத் தலைவராக
குடியரசுத் தலைவர் பதவி விலகும் சமயத்திலோ அல்லது மரணமடையும்போதோ அல்லது நீக்கப்படும்போதோ, புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, குடியரசுத் துணைத் தலைவர் 'பொறுப்பு குடியரசுத் தலைவராக' செயல்படுவார். இதன் காரணமாக, 788 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் குழு விரைவாக புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும். இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிக உயர்ந்த அரசியலமைப்புப் பதவி
2022-ஆம் ஆண்டு குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற ஜெகதீப் தன்கர், 2027-ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ளது. அரசியலமைப்பு நடைமுறைகளின்படி, குடியரசுத் துணைத் தலைவரின் தேர்தல் அரசியலமைப்பின் 63 முதல் 71 வரையிலான பிரிவுகள் மற்றும் 1974-ஆம் ஆண்டு துணைத் தலைவர் (தேர்தல்) விதிகளின்படி நடைபெறுகிறது. குடியரசுத் தலைவருக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்புப் பதவி இதுவாகும்.
குடியரசுத் துணைத் தலைவர் நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் அல்லது எந்த மாநில சட்டமன்றத்திலும் உறுப்பினராக இருக்க முடியாது. மேலும், அவர் ராஜ்யசபாவின் தலைவராகவும் செயல்படுவார். ராஜ்யசபாவில் ஒழுங்கு மற்றும் சட்ட திட்டங்களை நிலைநாட்டுவது அவருடைய முக்கியமான பணியாகும். இந்த நடைமுறைகள் குடியரசுத் துணைத் தலைவரின் செயல்பாடுகளை வரையறுக்கின்றன.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?
அரசியலமைப்பின் 66-வது பிரிவின்படி, குடியரசுத் துணைத் தலைவர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்ட 'தேர்தல் குழுவால்' தேர்ந்தெடுக்கப்படுகிறார். லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில், ஒற்றை மாற்று வாக்கு அடிப்படையில் வாக்களித்து துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
குடியரசுத் துணைத் தலைவர் பதவி தற்போது காலியாக இருப்பதால், புதிய துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் விரைவில் மேற்கொள்ளும். இந்த பதவி விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.












Click it and Unblock the Notifications