"லித்தியம் எடுக்க இந்திய கம்பெனி காஷ்மீருக்கு கால் வைத்தாலே தாக்குவோம்!" பயங்கரவாதிகள் பரபர மிரட்டல்
காஷ்மீரில் லித்தியம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
டெல்லி: காஷ்மீரில் லித்தியம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், பயங்கரவாத அமைப்பு ஒன்று திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பல நாடுகளும் இப்போது கார்பன் உமிழ்வைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. அதன்படி உலகின் அனைத்து நாடுகளும் மெல்ல மின்சார வாகனங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
இதுபோன்ற மின்சார வாகனங்களுக்கு பேட்டரிக்கள் தயாரிக்கத் தேவையான பொருட்களில் அடிப்படையானது லித்தியம்.. இதற்கிடையே இந்தியாவில் காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

காஷ்மீர் லித்தியம் இருப்பு
காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன்கள் கொண்ட லித்தியம் வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.. இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் நடத்தி இந்த ஆய்வில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் லித்தியம் இருப்பு கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும். வரும் காலங்களில் லித்தியம் பேட்டரி பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இது இந்தியாவுக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

பயங்கரவாத அமைப்பு
இதற்கிடையே காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த லித்தியம் சுரங்கங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத அமைப்பான மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி மிரட்டல் கடிதத்தை வெளியிட்டுள்ளது. லித்தியம் இருப்பு குறித்து அரசு அறிவித்து சில நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், இந்த மிரட்டலை அவர்கள் விடுத்துள்ளனர். பிஏஎப்எப் எனப்படும் மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முஹம்மது ஆதரவுடன் இயங்கும் அமைப்பாகும்.

மிரட்டல்
இந்த மிரட்டல் கடிதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் நகரத்திலிருந்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.. ஜம்மு காஷ்மீரின் வளங்களை எந்த இந்திய நிறுவனமும் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் காஷ்மீர் வளர்ச்சிக்காகச் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ட்ரோன்கள் பறப்பது போன்ற மூன்று படங்களையும் அவர்கள் பகிர்ந்து, காஷ்மீரை அவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

தாக்குவோம்
மேலும், காஷ்மீரில் லித்தியம் எடுக்க வரும் இந்திய நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.. அந்த கடிதத்தில், "ஜம்மு காஷ்மீரின் வளங்கள் திருடுவதை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க மாட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.. இந்த வளங்கள் ஜம்மு காஷ்மீர் மக்களுக்குச் சொந்தமானது மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்.. அப்படித்தான் பயன்படுத்தப்படும். யாரையும் நமது வளங்களைத் திருடி, அதை வைத்தே நம்மை அழிக்க அனுமதிக்க மாட்டோம்.. கலவரமான ஜம்மு காஷ்மீரில் இறங்க நினைக்கும் இந்திய நிறுவனங்களை ஜம்மு காஷ்மீருக்குள் மட்டுமல்ல, இந்தியாவிற்குள்ளும் தாக்குவோம்,

பகிர்ந்து கொள்ள வேண்டும்
எங்கள் வார்த்தையை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்வோம் என்பது எங்களை அறிந்தவர்களுக்குத் தெரியும். அதேநேரம் சர்வதேச நிறுவனங்கள் காஷ்மீரின் வளங்களை மேம்படுத்த இருக்கிறோம்.. அவர்கள் லாபத்தை மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். உள்ளூர் மக்களை இங்கு வேலைக்கு அமர்த்தினால், இந்தியா காஷ்மீர் மீது வைத்திருக்கும் பொருளாதார பிடியிலிருந்து விடுபட முடியும். நமது நிலத்தை அபகரித்து, வீடுகள் மற்றும் வணிக வளாகங்களைச் சூறையாடுவதை அனுமதிக்க மாட்டோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மாஸ்டர் ஸ்ட்ரோக்
இது தொடர்பாக சைபர் உளவுத்துறை ஆய்வாளர் நீலேஷ் புரோஹித் கூறுகையில், "அங்கு லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலகின் பல நாடுகளைக் காஷ்மீர் பக்கம் திருப்பியுள்ளது. இப்போது வரை காஷ்மீர் ஆப்பிள் மற்றும் சுற்றுலாவுக்குத் தான் பிரபலம். ஆனால், வரும் காலத்தில் இந்தியாவின் லித்தியம் சப்ளையர் ஆக முடியும்.. இது இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்காக இருக்கும் இது அப்பகுதியில் சுங்கத்துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்..

தடை செய்யப்பட்ட அமைப்பு
இதனால் இளைஞர்கள் பயங்கரவாதிகளுடன் இணையும் போக்கும் குறையும். பயங்கரவாதிகளால் இளைஞர்களை ஈஸியாக மூளைச்சலவை செய்ய முடியாது" என்று அவர் கூறியிருந்தார். பிஏஎப்எப் எனப்படும் மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி என்ற பயங்கரவாத அமைப்பை இந்தியா இந்தாண்டு ஜனவரியில் தான் தடை செய்தது. இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றும் நடவடிக்கையில் பிஏஎப்எப் ஈடுபட்டிருந்தது.. மேலும், இந்தியாவிலும் அவர்கள் பல்வேறு பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications