இதுதான் குஜராத் மாடலா? குழாய் இருக்கு! ஆனா தண்ணீர் வரல.. குடிநீருக்கு போராடும் மக்கள்!
காந்திநகர்: குஜராத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று ஆளும் பாஜக அரசு கூறி வரும் நிலையில், குடிநீர் விநியோகம் போதுமான அளவுக்கு இல்லை என்றும், தேசிய சராசரியை விட குறைவாக இருக்கிறது என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் 'வீட்டுக்குழாய் இணைப்புகளின் செயல்பாட்டுத் திறன் மதிப்பீட்டு அறிக்கை-2024' படி, குஜராத்தில் வெறும் 47.3% வீடுகளுக்கு மட்டுமே தரமான குடிநீர் வழங்கப்படுகிறது. இது தேசிய சராசரியான 76%ஐ விடக் கணிசமாகக் குறைவு.

இந்த அமைச்சகத்தின் திட்ட இலக்கின்படி, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டருக்கும் மேல் குடிநீர் பெறும் வீடுகள் குஜராத்தில் 58.7% மட்டுமே உள்ளன. இது தேசிய சராசரியான 80.2%ஐ விடக் குறைவு. மேலும், குழாய் நீர் இணைப்புகளின் செயல்பாட்டு நிலையும் தேசிய சராசரி 76%ஐ விட 47.3%ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.
இதற்கிடையே, காந்திநகரில் டிசம்பர் 29 முதல் 100-க்கும் மேற்பட்ட டைபாய்டு காய்ச்சல் கேஸ்கள் பதிவாகியுள்ளன. குடிநீரில் கழிவுநீர் கலந்ததே இதற்கு காரணம் என மாநகராட்சி ஆணையர் கூறியிருந்தார். அப்படியெனில், விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு மட்டுமல்ல.. தரமும் மோசமாக இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்த பிரச்சனையை தொடர்ந்து, கசிவுகள் சரிசெய்யப்பட்டு, நீர் குளோரின் மூலம் சுத்திகரிக்கப்பட்டதாகவும் ஆணையர் விளக்கமளித்தார்.
அறிக்கையின்படி, காந்திநகரில் வெறும் 31.9% வீடுகளும், மாநிலத்தின் பெரிய நகரமான அகமதாபாத்தில் 46.1% வீடுகளும் மட்டுமே குடிப்பதற்கு உகந்த நீரைப் பெறுகின்றன.












Click it and Unblock the Notifications