நான் முஸ்லீமே இல்லை.. இருந்தும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறேன்.. ஜாமியா மாணவி
டெல்லி: நான் முஸ்லீம் பெண் இல்லாவிட்டாலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து எங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் முதல் நாள் முதற்கொண்டு நான் போராடி வருகிறேன் என ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை குறித்து மாணவி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று டெல்லியில் ஜந்தர் மந்தரில் மாணவ அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இதையடுத்து ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதி பேரணி நடத்த ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தயாராகினர். அப்போது அனுமதியின்றி இது போல் பேரணி நடத்தக் கூடாது என போலீஸார் அவர்களை தடுத்தனர்.

100 மாணவர்கள்
அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே பேருந்துகள், இரு சக்கர வாகனங்களுக்கு தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து 100 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

போராட்டம்
நேற்று இரவு நடந்த இந்த வன்முறை குறித்து ஜாமியா பல்கலைக்கழக மாணவிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அப்போது ஒரு மாணவி, நான் முஸ்லீமே இல்லை. இருந்தாலும் குடியுரிமை போராட்டத்தை எதிர்த்து முதல் நாள் முதற்கொண்டு போராடி வருகிறேன்.

ஆபத்து
ஏன், எனது குடும்பத்தினருக்கு (முஸ்லீம் மாணவர்களுக்கு) நடந்த விவகாரத்தினால்தான். எது சரியோ அதன் பக்கம் நிற்காமல் நாம் படித்து என்ன பயன்? என்றார். இன்னொரு மாணவி கூறுகையில் மாணவர்களுக்கு டெல்லி பாதுகாப்பான இடம் என நாங்கள் நினைத்தோம். இது மத்திய பல்கலைக்கழகம். அதன் இது நமக்கு பாதுகாப்பான இடம். இங்கு நமக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என நினைத்தோம்.

எங்கள் நண்பர்கள்
ஆனால் நேற்று இரவு நாங்கள் அழுதோம். என்ன நடக்கிறது இங்கு? ஒட்டுமொத்த நாடும் பாதுகாப்பானதாக இல்லை என்றே கருதுகிறேன். நான் எங்கு செல்வது என தெரியவில்லை. அப்படியே சென்றாலும் எங்கள் மீது தாக்குதல் நடக்கிறது. நாளை காலை எங்கள் நண்பர்கள் இந்தியர்களாக இருப்பார்களா என்றே தெரியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications