ரூ.8,000 கோடி கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ்… சம்பளமில்லை.. ஏப்.1 முதல் விமானிகள் ஸ்டிரைக்
டெல்லி: நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்காவிட்டால் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விமானங்களை இயக்காமல் வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக ஜெட் ஏர்வேஸ் விமானிகள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
ஜெட்ஏர்வேஸ் நிறுவனமானது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. கடன் நெருக்கடியால் விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 3 மாதம் வரை ஊதியம் வழங்கப்படவில்லை. ரூ. 8,000 கோடி கடனில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ், விமானிகளுக்கும் ஊதியத்தை வழங்காததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் நிலுவை ஊதியத்தை மார்ச் 31ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று ஜெட் ஏர்வேஸ் விமானிகள் கெடு விதித்து உள்ளனர். அப்படி ஊதியம் தராவிட்டால், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விமானங்களை இயக்கப்போவது இல்லை என்று ஜெட் ஏர்வேஸ் விமானிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே பயணிகளின் குறைகளை உடனடியாக களையுமாறு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கேட்டு கொண்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிர்வாகிகளுடன், விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அவசர ஆலோசனை நடத்தியது.
அப்போது விமானம் ரத்து செய்யப்பட்டால் கட்டணத்தை திரும்ப வழங்குவது உள்பட பல விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும், மாற்று பயணத்திற்கு ஏற்பாடு போன்றவற்றை பயணிகளுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று ஜெட்ஏர்வேஸ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்து.
விஸ்வரூபம் எடுத்துள்ள ஊதிய விவகாரத்தால் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஜெட் ஏர்வேஸ் 78 விமானங்களை தரையிறக்கி நிறுத்தி உள்ளதால் 1,000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 603 உள்நாட்டு சேவைகளையும் 382 வெளிநாட்டு சேவைகளையும் ஜெட் ஏர்வேஸ் ரத்து செய்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications