மோடி, அமித்ஷாவுக்கு எதிராக கோஷம் போட்ட.. மாணவர்கள் மீது FIR! ஜேஎன்யுவில் மீண்டும் சலசலப்பு
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, கடந்த 5ம் தேதி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு எதிராக, முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக கூறி, பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறது. இதனை தொடர்ந்து மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 2020ம் ஆண்டு ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த வளாக வன்முறை நினைவாகவும், காயமடைந்த மாணவர்களுக்கும், ஜாமீன் மறுக்கப்பட்ட சமூக ஆர்வலர்களான உமர் காலித், ஷர்ஜில் இமாம் ஆகியோருக்கு ஆதரவாகவும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில்தான் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.

புகார் கொடுத்த பல்கலைக்கழகம்
இது குறித்து ஜேஎன்யு நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. புகாரின் அடிப்படையில், தற்போதைய பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் அதிதி மிஸ்ரா உட்பட சில மாணவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பல்கலை நிர்வாகம் இது குறித்து கூறுகையில்,
"கோஷங்களை எழுப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது ஏற்றுக்கொள்ள முடியாத, வெறுப்பை தூண்டும் கோஷங்கள். இவை திட்டமிட்டு தொடர்ச்சியாக நடக்கின்றன. இப்படியான சம்பவங்கள் பொது ஒழுங்கு, வளாக நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடியவை. பல்கலைக்கழகங்கள் வெறுப்பின் கூடாரங்களாக மாற அனுமதிக்கக் கூடாது. அவை புதிய சிந்தனைகளின் மையங்களாகத் திகழ வேண்டும்" என்று கூறியுள்ளது.
மறுக்காத மாணவர் சங்கம்
மறுபுறம் மாணவர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த வளாக வன்முறை நினைவாகவும், காயமடைந்த மாணவர்களுக்கும், ஜாமீன் மறுக்கப்பட்ட சமூக ஆர்வலர்களான உமர் காலித், ஷர்ஜில் இமாம் ஆகியோருக்கு ஆதரவாகவும் இந்த கவன ஈர்ப்பு இயக்கம் நடந்ததாகக் கூறியது. எனினும், கோஷம் எழுப்பியதை சங்கம் மறுக்கவில்லை.
வழக்குப்பதிவு
காவல்துறை தரப்பில் கூறுகையில், "இத்தகைய கோஷங்கள் ஜனநாயக எதிர்ப்பு கொண்டவை. இது ஜேஎன்யுவின் நடத்தை விதிகளை மீறுவதோடு, பொது ஒழுங்கு, வளாக நல்லிணக்கம் மற்றும் பல்கலைக்கழக பாதுகாப்பைப் பாதிக்கும்" என வசந்த் குஞ்ச் (வடக்கு) காவல் நிலையத்திற்கு தலைமை பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார். எனினும், FIR பதிவு செய்யப்பட்டதை காவல்துறை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
அமைச்சர்கள் கண்டனம்
பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிரான கோஷங்களை டெல்லி மற்றும் மத்திய அமைச்சர்கள் கடுமையாகக் கண்டித்தனர். டெல்லி கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட், "பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக தனிப்பட்ட, வன்முறைப் பேச்சுக்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்றார். தொழிலாளர் நல அமைச்சர் கபில் மிஸ்ரா, கோஷங்களை எழுப்பிய மாணவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்ப்பது அமைப்பையே சீர்குலைக்கும் என்றும் கூறியுள்ளார்.
மாணவர்களின் குற்றச்சாட்டு
மத்திய அமைச்சர்களான கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல், கிரிராஜ் சிங் ஆகியோரும் பிரதமர் மோடிக்கு எதிரான கோஷங்களை வன்மையாகக் கண்டித்தனர். எனினும், இந்த கவன ஈர்ப்பு இயக்கம், பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே நடந்தது என ஜேஎன்யு மாணவர் அமைப்பு விளக்கமளித்துள்ளது. எதிர்ப்பை நசுக்க அதிகாரிகள் முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
"முகமூடி அணிந்த குண்டர்களால் மாணவர்கள் மீது நடந்த தாக்குதல்கள், முரண்பட்ட குரல்களுக்கு எதிராக தொடுக்கப்படும் வன்முறையை ஒடுக்குவதற்கு பதிலாக, கவனத்தைத் திசைதிருப்ப ஒரு திட்டமிட்ட முயற்சி நடக்கிறது" மாணவர் சங்கம் கூறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications