வெடிக்கும் CAA போராட்டம்! ஜேஎன்யு மாணவர்கள் அமைதி காக்க வேண்டும்.. பல்கலை நிர்வாகம் அறிவுறுத்தல்
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு பல்வேறு இடங்களில் போராட்டங்களை தூண்டியுள்ள நிலையில், டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அமைதி காக்குமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 1955ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தின்படி, இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்க அச்சட்டம் வழிவகுத்தது. அதில் திருத்தம் செய்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிருத்துவர்கள் ஆகியோர் இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்க தற்போது இப்புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகுத்துள்ளது.

இசுலாமியர்களை மட்டும் திட்டமிட்டுப் புறந்தள்ளிவிட்டு மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் திருத்தச்சட்டம் மூலம் இந்நாட்டின் அடித்தளமான மதச்சார்பின்மைக் கோட்பாடே முற்றுமுழுதாக துடைத்தெறியப்படும் என எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை விமர்சித்துள்ளன.
அதேபோல புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் உட்பட 16 கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் இன்று முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியாவை போல இந்தியாவின் மிக முக்கிய கல்வி நிலையமாக டெல்லி ஜேஎன்யு இருக்கிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே சிஏஏ-வை எதிர்த்து வீரியமிக்க போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்நிலையில், இந்த முறை இதுபோன்ற போராட்டங்கள் எதுவும் நடக்கக்கூடாது என்பதில் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதியாக இருக்கிறது.
எனவே, மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. நேற்று மாலை இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "கல்லூரியில் நடந்து வரும் மாணவர்களின் தேர்தல் செயல்முறை மற்றும் மாணவர் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பல்கலை வளாகத்தில் எந்தவித ஒழுங்கீன செயல்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்படாது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2020ம் ஆண்டு சிஏஏ சட்ட திருத்தத்தை எதிர்த்து ஜேஎன்யு மாணவர்கள் அமைதி பேரணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் பேரணியில் சென்ற மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications