நீதி, சுதந்திரம், சமத்துவம்.... நிரந்தர சித்தாந்தங்கள்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடியரசு தின உரை
டெல்லி: நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியனவை நமது வாழ்வின் நிரந்தரமான சித்தாந்தங்கள் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய குடியரசு தின உரையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தி உள்ளார்.
நாட்டின் 72-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. குடியரசு தின நிகழ்வுகளில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொலைக்காட்சி மூலம் இன்று ஆற்றிய உரை:

அரசியல் சாசன அங்கீகாரம்
உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்கள் அனைவருக்கும் நாட்டின் 72-வது குடியரசு திருநாளை முன்னிட்டு வாழ்த்துகள். இந்த நாளில் தேசிய கொடி, அரசியல் சாசனம் மீது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம். குடியரசு திருநாள், உள்நாடு, அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான மகத்தான நாள். 71 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில்தான் அரசியல் சாசனம் அங்கீகரிக்கப்பட்டு சட்டமானது.

கொரோனா காலத்தில் விவசாயிகள்
அரசியல் சாசனத்தின் குறிக்கோளான நீதி, சுதந்திரம் உள்ளிட்ட புனிதமான ஆதர்சங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும். அனேகமான மக்கள் நாயகர்கள், சிந்தனையாளர்கள் நமது சுதந்திர போராட்டத்துக்கு உத்வேகம் அளித்தவர்கள். கொரோனா காலத்திலும் வேளாண் உற்பத்தியை குறையவிடாமல் நமது விவசாய பெருமக்கள் பார்த்து கொண்டது மகத்தானது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா வைரஸின் உயிரியல் குறியீட்டு முடிச்சுகளை கண்டறிந்து தடுப்பூசியை மேம்படுத்தி நமது விஞ்ஞானிகள் மனிதகுலத்துக்காக புதிய வரலாறு படைத்திருக்கின்றனர். உணவுப் பாதுகாப்பு, ராணுவ பாதுகாப்பு, பேரிடர்கள்-நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்று பல்வேறு துறைகளில், நமது விஞ்ஞானிகள் தங்கள் பங்களிப்பு வாயிலாக தேசிய முயற்சிகளுக்கு சக்தியளித்திருக்கின்றார்கள்.

மருத்துவர்கள், ராணுவ வீரர்கள்
வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடுகையில், இறப்புவீதத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதிலும், நமது விஞ்ஞானிகள், மருத்துவர்கள் ஈடு இணையற்ற பங்களிப்பை அளித்திருக்கின்றார்கள். ராணுவ வீரர்களும், கடுமையான சூழ்நிலைகளிலும், தேசத்தின் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றார்கள். இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமது குடியரசு தின உரையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications