இன்னும் என்னென்ன இருக்கோ? 12 தங்க பிஸ்கட்டுகளுடன் சிக்கிய தெலுங்கானா அரசு அதிகாரி
ஹைதராபாத்: தெலுங்கானா அரசு அதிகாரியின் வீட்டில் 150 கோடி சொத்துக்கள் சிக்கிய வழக்கில், இப்போது அடுத்த அதிர்ச்சியாக அவரது மனைவியின் லாக்கர் உடைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய இந்த அதிரடி சோதனையில், கிலோ கணக்கில் தங்க பிஸ்கட்டுகளும் கோடிக்கணக்கான பணமும் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் வெளிவரப் போகிறதோ என்று தெலுங்கானா அரசு வட்டாரமே தற்போது உறைந்து போய் கிடக்கிறது. என்ன நடந்தது?
தெலுங்கானா மாநிலத்தில் நில அளவை மற்றும் நில ஆவணங்கள் துறையின் துணை இயக்குனராகப் பணியாற்றி வந்தவர் நரஹரி ராவ்.. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் கடந்த ஜூன் 16ம் தேதி கைது செய்யப்பட்டார். விசாரணையும் நடந்தது.

ஹைதராபாத் அரசு அதிகாரி
அப்போது ஹைதராபாத் சாலி பண்டா பகுதியில் உள்ள ஒரு வங்கியில் அவரது மனைவியின் பெயரில் 2 சீக்ரெட் லாக்கர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த லாக்கர்களை நேற்று முன்தினம் திறந்து அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில் மேலும் 2 கிலோ தங்கம் மற்றும் ரூ.1.50 கோடி ரொக்கப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் பின்னணி குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, அரசு அதிகாரியான நரஹரி ராவ் தனது பதவியை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் ஊழல் செய்ததாக புகார்கள் கிளம்பின..
12 தங்க பிஸ்கட்டுகள்
இந்த புகார்களின் அடிப்படையில் கடந்த வாரம் அவரது வீட்டில் நடத்தப்பட்ட முதல் கட்ட சோதனையிலேயே, கணக்கில் வராத ரூ.1.54 கோடி ரொக்கப் பணம், 1.3 கிலோ தங்கம், 8 கிலோ வெள்ளி, ஹைதராபாத்தின் முக்கிய இடங்களில் ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அதிரடி சோதனைகளை தொடர்ந்து நரஹரி ராவ் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஆனால் அவர் ஜெயிலில் இருந்தாலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தங்களது விசாரணையை நிறுத்தவில்லை. அவரது குடும்பத்தினரின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அப்போதுதான் சாலி பண்டா பகுதியில் உள்ள முன்னணி வங்கியின் 2 லாக்கர் விபரங்கள் சிக்கின. இதையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் அந்த 2 லாக்கர்களும் முறைப்படி திறக்கப்பட்டு அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
உடைக்கப்பட்ட லாக்கர்கள்
அந்த லாக்கர்களுக்குள் சோதனை நடத்திய போது அதிகாரிகள் மேலும் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே தலா 100 கிராம் எடையைக் கொண்ட 12 தூய தங்க பிஸ்கட்டுகள், அதிமதிப்புமிக்க வைர ஆபரணங்கள் என மொத்தம் 2 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமல்லால் கட்டுக்கட்டாக ரூ.1.50 கோடி அசல் ரொக்கப் பணமும் அந்த லாக்கர்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இப்போது வரை நரஹரி ராவ் சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ள இந்த 2 கட்ட சோதனைகளின் முடிவில், ஒட்டுமொத்தமாக 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணமும், 3.3 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளும், ரூ.150 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட சொத்து ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
ஒரு சாதாரண அரசு அதிகாரி இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை நூறு கோடி ரூபாய் சொத்துக்களை எப்படியெல்லாம் முறைகேடாகத் திரட்டினார், இதன் பின்னணியில் வேறு எந்தெந்த உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலிஸார் தங்களது விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications