நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம்: போலீசாரின் செல்போன்கள் ஒப்படைப்பு.. பரபர தகவல்
டெல்லி: ஹோலி பண்டிகை நாளில் டெல்லியில் உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இது தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், நிகழ்விடத்திற்கு முதலில் சென்ற போலீசாரின் செல்போன்கள் டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்கப்பட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது. பழைய பொருட்கள் வைக்கும் ஒரு அறையில் தீயை அணைத்தபோது, அங்கு 4 அல்லது 5 சாக்கு மூட்டைகளில் எரிந்த நிலையில் கத்தை, கத்தையாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்
நீதிபதி வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய முன்மொழியப்பட்டு இருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் கொலீஜியம் கூட்டம் நேற்று நடந்தது. அதில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு சிபாரிசு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதனால், நீதிபதி இடமாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன், இடமாற்றம் அமலுக்கு வரும். இதற்கிடையே, நீதிபதி வீட்டில் கத்தை கத்தையாக பணம் எரிந்த நிலையில், கிடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
5 போலீஸ்காரர்களின் போன்கள் ஒப்படைப்பு
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்துள்ளார். வர்மாவுக்கு எந்த நீதிமன்ற அலுவலும் ஒப்படைக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீதிபதி வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் கிடைத்ததும் ஸ்பாட்டுக்கு முதலில் சென்ற 5 போலீஸ்காரர்களின் போன்கள் டெல்லி காவல்துறையில் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடத்தில் இந்த போன்கள் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குழு விசாரணையின் போது செல்போன்களில் உள்ள தரவுகள் ஆய்வு செய்யப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
திங்கள் கிழமை காலை 5 போலீசாரையும் அழைத்த டெல்லி காவல் ஆணையர் சஞ்செய் ஆரோரா, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் எந்த தகவல்களையும் அழிக்க கூடாது என்றும் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இரண்டு எஸ்.ஹெச்.ஓ, ஒரு சப் இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டபிள்கள் என ஐந்து பேரின் செல்போன்கள் டெல்லி காவல் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications