மறக்குமா நெஞ்சம்! சோனியா பக்கத்தில் யாரு பாருங்க! அட இவர் ராகுலின் மாஜி படை தளபதியாச்சே! சுவாரசியம்
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முதல் புதிய கட்டடத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு உள்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருடன் பழைய நாடாளுமன்ற கட்டடம் தனது பணியை முடித்து கொண்டது. நேற்று முதல் நாடாளுமன்ற ராஜ்யசபா, லோக்சபா நிகழ்வுகள் அனைத்தும் புதிய நாடாளுமன்ற கட்டத்தில் தொடங்கியது.
முன்னதாக நேற்று காலையில் பழைய நாடாளுமன்ற கட்டத்தின் முன்பு பிரதமர் மோடி உள்பட இரு சபைகளின் தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். அதன்பிறகு நாடாளுமன்ற மைய மண்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இந்த வேளையில் பிரதமர் மோடியுடன் மேடையில் ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
இந்த வேளையில் எம்பிக்களோடு சேர்ந்து சோனியா காந்தி அமர்ந்திருந்தார். சோனியா காந்தி அருகே அமர்ந்திருந்த காங்கிரஸின் மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொண்டதால் அவர் அருகே இருந்த இடம் காலியானது. இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அருகே அமர்ந்திருந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கவனித்தார். இதையடுத்து அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து சோனியா காந்தியை நெருங்கினார்.
இதையடுத்து இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். அதன்பிறகு சோனியா காந்தி அருகே ஜோதிராதித்யா சிந்தியா அமர்ந்து சில நிமிடங்கள் அரட்டையடித்தார். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் வலதுகரமாக ஏறக்குறைய அவரது படைத்தளபதியாக செயல்பட்டார். ராகுல் காந்தியும், ஜோதிராதித்யா சிந்தியாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ராகுல் காந்தி, ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட் (ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்) ஆகியோர் இணைப்பிரியா நண்பர்களாக வலம் வந்தனர்.

இதற்கிடையே தான் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு ஜோதிராதித்யா சிந்தியா பெரும் பங்கு வகித்தார். முதல்வர் பதவி அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் கமல்நாத்துக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து அதிருப்தியடைந்த ஜோதிராதித்யா சிந்தியா கடந்த 2020ல் தனது ஆதரவாளர்களான 22 எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு தாவினார். இதையடுத்து மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து ஜோதிராதித்யா சிந்தியா ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டதோடு அவர் மத்திய அமைச்சராக்கப்பட்டார். இத்தகைய சூழலில் தான் ஜோதிராதித்யா சிந்திரா ராகுலின் தாயும், தன்னை அரசியலில் பிரபலமாக்கிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவியுமான சோனியா காந்தி அருகே அமர்ந்து அரட்டையடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications