“அந்த காளியும் கருப்புதான்” - லோக்சபாவில் மோடிக்கு பதிலடி கொடுத்த கனிமொழி!
டெல்லி: நாடாளுமன்றச் சிறப்புத் தொடரில், பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது, பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு திமுக எம்பி கனிமொழி அளித்த அனல் பறக்கும் பதிலடி கவனம் பெற்றிருக்கிறது.
திமுக எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்திருப்பதை பிரதமர் விமர்சித்ததற்கு, கனிமொழி இரண்டு தளங்களில் பதிலளித்தார்.
பெண் சக்தியின் வடிவமான காளி தேவி கருப்பு நிறத்தைக் கொண்டவர் என்பதையும், அவர் ஆணவத்தையும் அராஜகத்தையும் அழிப்பவர் என்பதையும் சுட்டிக்காட்டினார். ஹிந்துத்துவத்தைப் பேசுபவர்களுக்கு இது ஏன் நினைவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதேநேரம், கறுப்பு என்பது தந்தை பெரியாரின் நிறம். அது சுயமரியாதை மற்றும் சமரசமற்ற போராட்டத்தின் அடையாளம் என்று அவர் விளக்கினார்.

முன்னதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கனிமொழி பதிலடி கொடுத்திருந்தார். தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை குறிப்பிட்டு திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசியிருந்தார். இதை கேள்வி எழுப்பிய ஓம் பிர்லா, "கருப்புக் கொடியோ, நீலக் கொடியோ எதை ஏற்றினால் என்ன?" என நக்கலாக கேட்டிருந்தார்.
கனிமொழி பேசும்போது, இது புரட்சியாளர் அம்பேத்கர் தனது கட்சிக்காகத் தேர்ந்தெடுத்த நிறம். நீலக் கொடியை அலட்சியப்படுத்துவது அம்பேத்கரின் கொள்கைகளையும் அவர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தையும் அலட்சியப்படுத்துவதற்குச் சமம் என்று சாடினார். அதேபோல கருப்புக்கொடி, ஜனநாயக ரீதியிலான போராட்டத்தின் குறியீடு. அரசியலமைப்பைச் சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம் என்பதை இது குறிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications