5,300 ஆண்டுகளுக்கு முன்பே.. தமிழ் நிலத்தில் இரும்பு பயன்பாடு! மத்திய அரசு மௌனம் ஏன்? -கனிமொழி எம்பி
டெல்லி: தமிழ் நிலப்பரப்பில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு பயன்பாடு இருந்திருக்கிறது குறித்து ஏன் மத்திய அரசு மௌனம் காத்தது என திமுக எம்பி கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியரசு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், “கும்பமேளாவில் உயிரிழந்த பக்தர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். பக்தர்கள் மத்திய அரசையும், மாநில அரசையும் நம்பினர். இந்த அரசு அவர்களை பாதுகாக்கும் என்று நம்பினர். ஆனால் நீங்கள் அவர்களை கைவிட்டுவிட்டீர்கள். மதமும் அரசியலும் ஒன்றிணையும்போது அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு கும்பமேளாதான் சிறந்த எடுத்துக்காட்டு. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கூட அறிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. உத்தரப்பிரதேசத்தில் தேவாலயங்கள் மீது கூட தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் வெவ்வெறு மதங்களை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக்கொள்ள முடிவதில்லை.
சிறுபான்மையினரை பாதுகாக்க மத்திய அரசு முற்றிலுமாக தவறிவிட்டது. அதேநேரம் மத்திய அரசின் தவறுகளை விமர்சித்தால் எங்களை ஆண்டி இந்தியன் என்று முத்திரை குத்துகிறார்கள்.
மறுபுறம் இரும்பு காலம் குறித்த கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு அங்கீகாரம் கொடுக்கவில்லை. இரும்பு காலம் குறித்து தமிழக அரசின் அறிவிப்பு குறித்து மத்திய அரசு இதுவரை ஏன் மௌனம் காத்து வருகிறது? இந்த ஆய்வின் முடிவை மத்திய அரசு ஏற்க வேண்டும். அதை அறிவிக்க வேண்டும். உலகின் முதன் முதலாக இரும்பை கண்டுபிடித்தது தமிழர்கள்தான் என்பதற்கான ஆதாரம் கிடைத்திருக்கிறது.
பட்ஜெட் குறித்து பேச வேண்டும் எனில், மத்திய பட்ஜெட்டில் திருக்குறளை தவிர தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்லை. குடியரசுத்தலைவர் உரையின் ஆங்கில மொழி பெயர்ப்பை படிக்க முடியவில்லை. அதில் ஏராளமான இந்தி, சமஸ்கிருத வார்த்தைகள் இருந்தன” என கனிமொழி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications