சிறுமி பலாத்காரம்: டெல்லியில் பதுங்கிய எடியூரப்பா.. கைது செய்ய விரட்டி வந்த கர்நாடகா சிஐடி டீம்!
டெல்லி: சிறுமி பலாத்கார வழக்கில் டெல்லியில் பதுங்கி இருக்கும் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்ய அம்மாநில சிறப்பு புலனாய்வுக் குழுவும் டெல்லியில் முகாமிட்டிருப்பதால் பரபரப்பு நிலவுகிறது.
80 வயதாகும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார் என்பது புகார். இதனால் எடியூரப்பா மீது பெங்களூர் சதாசிவ நகர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக தம் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்படுவதாக குமுறினார் எடியூரப்பா. அத்துடன் நிற்காமல் கர்நாடகா உயர்நீதிமன்றத்திலும் தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தார் எடியூரப்பா.
இதனிடையே எடியூரப்பா மீது புகார் கொடுத்த, சிறுமியின் தாயார் திடீரென மரணம் அடைந்தார். ஆனால் சிறுமியின் தாயாருக்கு உடல்நலன் பாதிப்பு இருந்தது; நுரையீரல் புற்று நோய் பாதிப்பால் இறந்துவிட்டார் எனவும் கூறப்பட்டது.
இந்த பின்னணியில் எடியூரப்பாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தை சிறுமியின் சகோதரர் நாடினார். அதே நேரத்தில் பலாத்கார வழக்கில் எடியூரப்பா விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது கர்நாடகா சிறப்புப் புலனாய்வுக் குழு. இந்த விசாரணைக்கு தம்மால் உடனடியாக ஆஜராக முடியாது; டெல்லியில் இருக்கிறேன்; ஜூன் 16-ந் தேதி ஆஜராகிறேன் என பதிலளித்தார் எடியூரப்பா. மேலும் தம்மை கைது செய்யாமல் இருக்க கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த பரபரப்புகளுக்கு இடையே எடியூரப்பாவை கைது செய்ய போக்சோ நீதிமன்றம் அதிரடியாக கைது வாரண்ட் பிறப்பித்தது. அதுவும் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்ததால் எடியூரப்பா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலைமை உருவானது.
தற்போது எடியூரப்பா டெல்லியில் முகாமிட்டிருப்பதால் கைது வாரண்ட்டுடன் கர்நாடகா சிஐடி போலீசார் டெல்லியில் தங்கி உள்ளனர். டெல்லியிலேயே போக்சோ நீதிமன்ற கைது வாரண்ட் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் எடியூரப்பா கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications