Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேகதாது திட்டத்துக்கு சீக்கிரம் ஒப்புதல் தாங்க! கர்நாடகா அடம்! மோடியை சந்தித்து சித்தராமையா கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி நதியின் குறுக்கே கனகபுரா தாலுகாவில் மேகதாது என்ற பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மேகதாது அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க கோரிய தமிழகத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து மேகதாது திட்ட பணிகளை மீண்டும் கையில் எடுக்க கர்நாடகா முயற்சித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிரதமரை சந்தித்து சித்தராமையா இது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி நதியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டிக் கொண்டே வருகிறது. மேகதாது அணை கட்டினால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிய நீர் கிடைக்காது என்பதால், இந்த அணை திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Mekedatu Karnataka Siddaramaiah

மேகதாது அணை திட்டம்

எனினும், தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுமான முயற்சிகளை செய்து வருகிறது. காவிரி நதியில் தமிழகத்திற்கு உள்ள உரிமைப்படி உரிய நீரை பெறுவதற்கு பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ள நிலையில், மேகதாதுவில் அணை கட்டினால்அது பெரும் பாதகமாக வாய்ப்பு உள்ளது என்பதால் தமிழகம் இந்த அணை கட்டக் கூடாது என்பதில் திட்டவட்டமாக உள்ளது.

ஆனாலும் இந்த விவகாரத்தில் கர்நாடக அரசியல் கட்சிகளும் சரி.. கர்நாடக அரசும் சரி சமயம் கிடைக்கும் போதெல்லாம் மேகதாது அணை விவகாரத்தை எழுப்பி வருகிறது. மேகதாது அணை திட்டத்திற்காக ஏற்கனவே ரூ.1,000 கோடி நிதியையும் கர்நாடகா ஒதுக்கி உள்ளது. அணை கட்ட மத்திய அரசிடம் ஒப்புதலும் கோரியுள்ளது. எனினும், மேகதாதுவில் அணைகட்ட கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது.

மோடியை சந்தித்த சித்தராமையா

சட்ட ரீதியான நடவடிக்கையில் தமிழகம் இறங்கினாலும் கூட, கர்நாடகா தொடர்ந்து அடம் பிடித்தே வருகிறது. இந்த நிலையில், நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசிய சித்தராமையா, மேகதாது திட்டத்துக்கு விரைவாக ஒப்புதல் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். பின்னர் செய்தியாளர்களுகுப் பேட்டி அளித்த சித்தராமையா கூறியதாவது:-

மேகதாது திட்டம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கர்நாடகத்துக்கு சாதகமாக தீர்ப்பு கூறியுள்ளது. அதனால் இந்த திட்டத்துக்கு விரைவாக ஒப்புதல் வழங்கும்படி மத்திய நீர் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடியிடம் கோரினோம். பத்ரா மேல் அணை திட்டத்துக்கு மத்திய அரசு அறிவித்த ரூ.5 ஆயிரத்து 300 கோடியை விடுவிக்கவும், கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்துக்கு வனத்துறையின் ஒப்புதல் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மோடி உறுதியளித்தார்

கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 136 கோடி நிவாரண உதவி வழங்குமாறு கேட்டுள்ளோம். மேலும் பயிர் சேதத்திற்கு நிவாரணம் வழங்க ரூ.615 கோடி கேட்டுள்ளோம். பொது சொத்து சேதங்களை சீர்செய்ய ரூ.1,521 கோடி வழங்குமாறு கோரியுள்ளோம். எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

விரைவாக அனுமதி வழங்கும்படி

குறிப்பாக மேகதாது திட்டம் மூலம் நாங்கள் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுகிறோம். இதற்கு விரைவாக அனுமதி வழங்கும்படி மத்திய நீர் ஆணையத்திற்கு தாங்கள் உத்தரவிடுமாறு கோரியுள்ளோம். காவிரி நீர் மேலாண்மை வாரியம் ஏற்கனவே மத்திய நீர் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாட்டின் மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்ச நீதிமன்றம், இதுகுறித்து மத்திய நீர் ஆணையமும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதை பிரதமர் மோடியிடம் எடுத்து கூறியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+