சிபிஐயின் புதிய இயக்குனராக கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் நியமனம்..யார் இவர்? பின்னணி என்ன! முழு விவரம்
டெல்லி: சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக கர்நாடக மாநில டிஜிபி பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ அமைப்பின் தற்போதைய இயக்குனராக இருக்கும் சுபோத் ஜெய்ஸ்வாலின் பதவிக் காலம் வரும் 25 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
மத்திய புலனாய்வு அமைப்பான சிபியின் இயக்குனராக தற்போது சுபோத் ஜெய்ஸ்வால் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து சிபிஐயின் அடுத்த இயக்குனரை தேர்வு செய்யும் நடைமுறையில் மத்திய அரசு ஈடுபட்டது.
சிபிஐயின் புதிய இயக்குனர் பதவிக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேர் பரிசீலனை செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில், கர்நாடக மாநில டிஜிபியாக இருக்கும் பிரவீன் சூட்-ஐ சிபிஐயின் அடுத்த இயக்குனாராக தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார். பிரதமர் மோடி, தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழு சிபிஐயின் புதிய இயக்குனரை தேர்வு செய்துள்ளது.

தற்போதைய சிபிஐ இயக்குனரின் பதவிக்காலம் முடிந்த பிறகு புதிய இயக்குனராக பிரவீன் சூட் பொறுப்பேற்பார். சிபிஐயின் தற்போதைய இயக்குனரின் பதவிக்காலம் வரும் மே 25 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. புதிதாக தேர்வு செய்யப்படும் சிபிஐ இயக்குனரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். எனினும் இவரது பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.
யார் இவர்?: 1986 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான பிரவீன் சூட் , கர்நாடக கேடரை சேர்ந்தவர். நாட்டின் மிக மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் இவரும் ஒருவர் ஆவார். கர்நாடக காவல்துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டிஜிபி ரேங்கிற்கு பதவி உயர்வு பெற்றார். இமாசல பிரதேசத்தை சேர்ந்த பிரவீன் சூட், டெல்லி ஐஐடியில் படித்தவர்.
1986 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணிக்கு தேர்வான பிரவீன் சூட் மைசூருவில் காவல் கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கினர். கர்நாடக காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து இருக்கும் பிரவீன் சூட் 1999 முதல் 2002 ஆம் ஆண்டு வரை மொரிசீயஸ் அரசுக்கு காவல் துறை ஆலோசகராகவும் பணியாற்றி இருக்கிறார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்ட பிரவீன் சூட், பெங்களூரில் உள்ள ஐஐடியில் பொதுக் கொள்கை மற்றும் மேலாண்மை துறையில் முதுகலை படிப்பை மேற்கொண்டார். அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு மைசூரு காவல் ஆணையராக பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டார். அப்போது அவர் நகரத்தின் போக்குவரத்து நெரிசலை மேற்கொண்ட நடவடிக்கைகள் கவனம் பெற்றது. பிரவீன் சூட் பதவி பெங்களூரு காவல் ஆணையராக இருந்த போது ' நம்ம 100' என்ற அவசர சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் டிகே சிவக்குமார், பிரவீன் சூட் மீது கடுமையான குற்றசாட்டுக்களை முன்வைத்தார். இவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அப்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்வதாகவும் டிஜிபியை கைது செய்ய வேண்டும் என்று டிகேசிவக்குமார் கூறினார். டிகேசிவக்குமாரின் இந்த விமர்சனம் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியிருந்தது.












Click it and Unblock the Notifications