அங்கே டெல்லியில் ஸ்டாலின் அசத்துறாரு.. நீங்களும்தான் இருக்கீங்களே.. எடியூரப்பாவை விளாசும் குமாரசாமி
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வைத்த ஒரு கோரிக்கை கர்நாடக அரசியல் கட்சி தலைவர்களை ஆட்டம் காண வைத்துள்ளது.
ஆம்.. டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக நலன் சார்ந்த கோரிக்கைளை முன்வைத்தார் ஸ்டாலின். நீட் தேர்வு ரத்து, தமிழகத்திற்குக் கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு என பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
இதில் முக்கியமான மற்றொரு கோரிக்கை, காவிரிக்கு குறுக்கே கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அமை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்பதாகும். இப்படி அனுமதி தந்தால் தமிழகத்திற்கு வரும் பங்கு நீர் குறைந்துவிடும் என்பது தமிழக முதல்வர் வலியுறுத்தலாக இருந்தது.
மேகதாது அணை.. ஒரு போதும் அனுமதிக்க முடியாதென முதல்வர் பேச்சு.. டெல்லி போகும் எடியூரப்பா.. பரபரப்பு
கர்நாடக அரசியலில் தாக்கம்
இந்த கோரிக்கையை வைத்த மறுநாளே கர்நாடக அரசியலில் பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சித் தலைவருமான குமாரசாமி, கர்நாடக அரசு இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இது குறித்து டிவிட்டர் பதிவுகளை வரிசையாக வெளியிட்டுள்ளார் குமாரசாமி.
ஸ்டாலின் சந்திப்பு
கர்நாடகாவிற்குப் பாதகம் ஏற்படும் நடவடிக்கையில் தமிழ்நாடு இறங்கிவிட்டது. ஆனால், கர்நாடக பாஜக அரசு இதைப் பற்றிக் கவனிக்கவேயில்லை. உட்கட்சி பூசலில் சிக்கித் தவித்து வரும் பாஜகவுக்கு மாநில, நிலம், நீர், மொழி குறித்து அக்கறை இல்லையா. நரேந்திர மோடியைத் தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து, மேகதாது அணைக்குத் தடை கேட்டுள்ளார். கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு இந்த வருஷத்திற்கு உரிய தண்ணீரைத் தர வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், பாஜக அரசு மெய் மறந்து போய் ஆட்சி நடத்திக் கொண்டு உள்ளது.
தேசிய கட்சிகள் தோல்வி
மேகதாது அணையை உருவாக்க பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளின் ஆட்சியிலும் முடியவில்லை. எனது ஆட்சியில்தான் அணைக் கட்டும் வேலைகளை ஆரம்பித்தேன். இப்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி, மத்தியிலும் அவர்கள் ஆட்சி. ஆனால் மேகதாது அணையைக் கட்டவில்லை. பாஜக கர்நாடக நலன் காப்பதில் தோல்வியடைந்துள்ளது. இதை மாநில மக்கள் கவனிக்க வேண்டும்.
மாநில கட்சிகளால்தான் நல்லது
தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இருப்பது மாநிலக் கட்சி. மாநில நலன் விஷயத்தில், தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தேசிய கட்சிகள் ஆட்சியிலிருந்தால் மாநில நலன்கள் பாதுகாக்கப்படாது. மாநில நலன் காக்க மாநிலக் கட்சிகள்தான் தேவை. அரசியல் சாசனத்தின் 8வது பிரிவில் குறிப்பிட்டுள்ள மாநில மொழிகளுக்கு ஆட்சிமொழி அந்தஸ்து பராமரிக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் அவரோடு நான் கை கோர்க்கிறேன். ஆனால் அண்ணன்-தம்பிகளாக இருக்க வேண்டிய இரு மாநில மக்களும், காவிரிக்காக மோதலில் ஈடுபடுவதால் லாபமில்லை.
மத்திய அரசுக்கு எதிராக ஒன்றுகூட அழைப்பு
தென் இந்திய மாநிலங்களின், மொழி, கலை, கலாச்சார விஷயங்களில், இப்போதைய மத்திய அரசு இடையூறு செய்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இரு மாநிலங்களும், காவிரி விஷயத்தால் மோதிக் கொள்ளக் கூடாது. நமது, மாநில நான்காக்க, நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை ஸ்டாலின் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். மேகதாது அணையால் தமிழகத்திற்குப் பாதிப்பு இல்லை. மேகதாது அணை திட்டம், குடிநீருக்கான திட்டம். எனவே, ஸ்டாலின், கர்நாடக அரசு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.