தேர்வு நெருங்குகிறது.. ஹிஜாப் அணிய அனுமதி கொடுங்கள் - உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் மனு
டெல்லி: தேர்வு அறைகளில் ஹிஜாப் அணிந்து செல்ல தடைவிதிக்கக் கூடாது என அரசுக் கல்லூரிகளுக்கு உத்தரவிடக் கோரி கர்நாடகாவைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடகா ஹிஜாப் தடை வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், மாணவிகள் தரப்பில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களில் கர்நாடகாவில் கல்லூரி தேர்வுகள் தொடங்கவுள்ளதால், இந்த வழக்கை அவசர வழக்காகக் கருதி விசாரிக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹிஜாப் தடை
கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அங்குள்ள சில கல்வி நிறுவனங்கள் தடை விதித்தன. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டங்களை நடத்திய போதிலும், யூனிபார்ம் விதிகளைக் காரணம் காட்டி கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல கர்நாடகா அரசு தடைவிதித்தது. இந்த தடைக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் கர்நாடகா உயர் நீதிமன்றத்தை நாடினர்.

மாறுபட்ட தீர்ப்பு
எனினும், ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.. பின்னர், இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த அக்டோபர் மாதம் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. ஹிஜாப் தடைக்கு ஆதரவாக ஒரு நீதிபதியும், எதிராக மற்றொரு நீதிபதியும் தீர்ப்பளித்தனர். இதனால் இந்த விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் குழப்பம் நீடிக்கிறது.

நெருங்கும் தேர்வு.. மீண்டும் மனு
இந்நிலையில், கர்நாடகாவில் வரும் பிப்ரவரி 6-ம் தேதி கல்லூரி, பல்கலைக்கழகங்கள் நெருங்குகின்றன. இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தற்போது ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா ஆஜராகி வாதிட்டார்.

"ஹிஜாபுக்கு தடை கூடாது"
அவர் கூறுகையில், "அரசுக் கல்வி நிலையங்களில் ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடையால் பல முஸ்லிம் மாணவிகள் தனியார் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்குச் சென்றுவிட்டனர். எனினும், செமஸ்டர் தேர்வுகளைத் தனியார் கல்வி நிலையங்களால் நடத்த முடியாது. எனவே, அரசுக் கல்வி நிலையங்கள் நடத்தும் இந்த தேர்வில், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல தடைவிதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என அவர் வாதிட்டார்.

"3 நீதிபதிகள் அமர்வே விசாரிக்க வேண்டும்"
இந்த வாதத்தைக் கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "ஏற்கனவே இது தொடர்பான வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளதால், இந்த மனுவை மூன்று நீதிபதிகள் அமர்வுதான் விசாரிக்க வேண்டும். எனவே, இதற்காக மூன்று நீதிபதிகள் அமர்வை அமைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கிறேன். தேர்வு நெருங்கவுள்ளதால் இந்த வழக்கை முன்னுரிமை கொடுத்து வரிசைப்படுத்துமாறு அறிவுறுத்தல்களை விரைவில் வழங்குகிறேன்" எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications