கார்த்தி சிதம்பரம் அதிரடி மூவ்.. “பொய் வழக்கு போட்டு என் குரலை முடக்க சதி” - சபாநாயகருக்கு கடிதம்!
டெல்லி : முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் சிபிஐ முன்பு விசாரணைக்காக ஆஜராகி வருகிறார்.
இந்நிலையில் சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், பொய் வழக்கு போட்டு நாடாளுமன்றத்தில் தனது குரலை ஒடுக்க சிபிஐ நினைப்பதாக கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

சிபிஐ வழக்கு
263 சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரம் 2வது குற்றவாளியாக சிபிஐயால் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் குற்றவாளியாக சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்ட ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டுள்ளார். விசா முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்காக, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

உரிமை மீறல்
இந்நிலையில், தன் மீது பொய் வழக்கு போட்டு தனது குரலை சிபிஐ ஒடுக்க நினைப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் கார்த்தி சிதம்பரம். அந்தக் கடிதத்தில், அரசுடன் இணைந்து விசாரணை அமைப்புகள் தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் குறிவைத்து மவுனமாக்குவதற்காக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தன்மீது புனையப்பட்டுள்ள இந்த வழக்கானது நாடாளுமன்ற உறுப்பினர் மீது அவையின் உரிமையை மீறிய ஒரு செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய ஆவணங்கள்
தனக்கு துளியும் சம்பந்தமில்லாத தனக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒரு வழக்கில் சிபிஐ தன்னுடைய வீட்டில் சோதனை நடத்தியதாகவும் அந்த சோதனையின்போது சில சொந்த குறிப்புகள், நாடாளுமன்ற நிலைக்குழு தொடர்பான சில ஆவணங்களையும் சிபிஐ எடுத்துச் சென்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்கவுள்ளது தொடர்பான ஆவணங்களையும் சிபிஐ சோதனையின்போது எடுத்துச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடனே நடவடிக்கை எடுங்கள்
நாடாளுமன்ற உறுப்பினராக தன்னுடைய நடவடிக்கையில் சிபிஐ குறுக்கீடு செய்வது ஜனநாயக நடைமுறைகள் மீதான நேரடி தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நாடாளுமன்ற உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications