Vijay CBI: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு! டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! என்னென்ன கேள்விகள்?
டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் மற்றும் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் ஏற்கெனவே இரு முறை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது 3ஆவது முறையாக சம்மன் அனுப்பி விசாரணை நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

டெல்லி பயணம்
இந்த வழக்கின் 3-வது கட்ட விசாரணைக்காக விஜய்க்கு கடந்த 10ஆம் தேதியே சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. முன்னதாக, தேர்தல் பணிகளைக் காரணம் காட்டி விசாரணைக்கு விலக்கு அளிக்கவோ அல்லது சென்னையில் விசாரணை நடத்தவோ விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், டெல்லி தலைமையகத்திலேயே ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. திட்டவட்டமாகத் தெரிவித்ததையடுத்து, நேற்று மாலை தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றடைந்தார். அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
இன்று காலை 10.45 மணியளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம், கீழ்க்கண்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்ப உள்ளதாகத் தெரிகிறது:
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக மக்கள் கூடியதற்கு யார் பொறுப்பு?
- கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகும் உரையைத் தொடர்ந்தது ஏன்?
- பாதுகாப்பு ஏற்பாடுகளில் எங்கே குளறுபடி ஏற்பட்டது?
- சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த விபரங்கள்.
விசாரணையின்போது ஏற்கனவே கேட்கப்பட்ட கூடுதல் ஆவணங்களையும் விஜய் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், த.வெ.க. தலைவரிடம் சி.பி.ஐ. நடத்தும் இந்தத் தொடர் விசாரணை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசாரணை மாலை வரை நீடிக்கலாம் என்றும், தேவைப்பட்டால் நாளையும் தொடர வாய்ப்புள்ளதாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணையின் முடிவை பொறுத்து விஜய் எப்போது சென்னை திரும்புவார் என தெரியவரும்.












Click it and Unblock the Notifications