வெற்றி துரைசாமி எங்கே? சட்லஜ் ஆற்றின் மர்மம்! போலீஸ் சொல்லும் பகீர் தகவல்! நம்பிக்கையில் உறவினர்கள்
டெல்லி: இமாச்சல் பிரதேசத்தில் சட்லஜ் ஆற்றில் கசாங் நலா எனும் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சி மிகவும் மோசமான நீர்வீழ்ச்சி என போலீஸார் தெரிவிக்கிறார்கள்.
சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி. இவர் என்றாவது ஒரு நாள் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் தனது தந்தையின் ஐஏஎஸ் அகாதெமியையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் த்ரில்லர் படத்தை இயக்கவிருந்தார். இதற்காக சிம்லாவில் ஷூட்டிங் எடுப்பதற்கான லொகேஷனை பார்க்க இமாச்சல் சென்றிருந்தார். உடன் அவருடைய உதவியாளர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் சென்றிருந்தார்.
அங்கு ஹோட்டலில் சாப்பிட்டு முடித்த வெற்றியும் கோபிநாத்தும் உள்ளூரில் பெரிய காரை எடுத்துக் கொண்டு ஓட்டுநர் டென்சினுடன் சிம்லா சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது கசாங் நலா எனும் பகுதியில் கார் சென்ற போது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்தது. இதையடுத்து தகவலறிந்த போலீஸார் ஆற்றுக்குள் விழுந்த காரை கயிறு கட்டி மீட்டனர். அதில் டென்சின் உடல் மீட்கப்பட்டது. கோபிநாத்தும் ஆற்றங்கரையில் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார்.
ஆனால் வெற்றியின் நிலைதான் தெரியவில்லை. அவரை 5 நாட்களாக தேடி வருகிறார்கள். ஆனாலும் கிடைக்கவில்லை, ஆழ்கடல் நீச்சல் வீரர்களை வைத்து 3 கி.மீ. தூரத்திற்கு தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. பாறை இடுக்குகளில் மூளை திசு கிடைத்துள்ளது. இது வெற்றியோடதா என அறிய டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சைதை துரைசாமியின் டிஎன்ஏவும் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு இரண்டும் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தால் மட்டுமே வெற்றியின் விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வர முடியும் என்கிறார்கள் போலீஸார். இந்த நிலையில் ஆற்றிலிருந்து வெற்றியின் ஐபோன், அவருடைய சூட்கேஸ், உடமைகளை அடங்கிய பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5 நாட்களாக தேடியும் கிடைக்காத நிலையில் வெற்றியின் புகைப்படத்தை உள்ளூர் பழங்குடியினரிடம் காட்டி அவரை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ 1 கோடி சன்மானம் என சைதை துரைசாமி கூறியதை போலீஸார் தெரிவித்தனர். இதனால் உள்ளூர் மக்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சட்லஜ் ஆற்றில் இருக்கும் கசாங் நலா எனும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் எப்போதும் நீரோட்டம் அதிகமாக காணப்படும். இந்த ஆற்றில் சிக்கியவர்களில் வெகு சிலரது உடல் மட்டுமே மீட்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவிக்கிறார்கள். காரும் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. இந்த நிலையில் வெற்றியின் குடும்பத்தினரோ வெற்றிக்கு ஒன்றும் ஆகியிருக்காது , அவர் உயிருடன் வருவார் என்றும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications