காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு.. எப்போது தொடங்குகிறது.. எப்படி விண்ணப்பிப்பது?
டெல்லி: காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு வரும் டிசம்பர் 17ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழ்நாடு மற்றும் வாரணாசி இடையே உள்ள பழமையான தொடர்புகளை கொண்டாடவும் மீண்டும் உறவுகளை உறுதிப்படுத்தவும் நடத்தப்படுவதுதான் காசி தமிழ் சங்கமம். இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்முறையாக தொடங்கப்பட்டது.

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய கல்வி அமைக்கத்தின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. பனாரஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஐஐடி மெட்ராஸ் இந்த நிகழ்ச்சிக்கு நிதியுதவி அளித்தது.
அது போல் காசி தமிழ் சங்கமத்திற்கு சிறப்பு ரயில்களை ரயில்வே அமைச்சகமும் இயக்கியது. ஒரு மாதம் நடந்த இந்த நிகழ்வில் சிறப்பு ரயில்களின் வாயிலாக தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் வாரணாசியில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலை, பண்பாடு, உணவு போன்ற கலாசாரம் தொடர்புடைய பரிமாற்றங்களும் நடந்தன.
இந்த தமிழ் சங்கமம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இரண்டாம் கட்ட நிகழ்வு டிசம்பர் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக தமிழகம், புதுவையில் இருந்து 1,400 பேர் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயிலில் அழைத்து செல்லப்படவுள்ளனர்,
இதற்காக 8 நாட்களுக்கான பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இலக்கியம், ஆன்மீகம், கலை சார்ந்த கருத்தரங்குகள், விவாதங்கள், பயிற்சி பட்டறைகள் போன்றவை நடத்தப்படும். தமிழகம் மற்றும் காசியின் கைத்தறி, கைவினைப் பொருட்கள், உணவு வகைகள் உள்ளிட்ட சிறப்பு தயாரிப்புகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
இந்த காசி சங்கமம் நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர், சென்னை ஐஐடி சார்பில் பிரத்யேகமாக உருவாக்கி இருக்கும் www.kashitamil.iitm.ac.in./ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.












Click it and Unblock the Notifications