காஷ்மீரில் சீனாவின் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள்.. பகீர் தகவல்கள்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சீனாவின் ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்கள் நடத்துவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தி வரும் ஆயுதங்களைக் கொண்டு பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்களை நடத்தி வந்தனர். நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் ஆஸ்திரியா தயாரிப்பு ஆயுதங்களையே தீவிரவாதிகள் பயன்படுத்தினர்.

1993 மும்பை தாக்குதல்கள், 2001 நாடாளுமன்ற தாக்குதல், 2008 மும்பை தாக்குதல்களில் இத்தகைய ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன. இவற்றை பாகிஸ்தான் ராணுவமே தீவிரவாதிகளுக்கு விநியோகித்து வந்தது.
தற்போது குறிப்பாக காஷ்மீரில் 370-வது சரத்து நீக்கப்பட்ட பின்னர் நடத்தப்படுகிற தாக்குதல்களில் சீனா தயாரிப்பு கையெறி குண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்ரீநகர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சீனா தயாரிப்பு சீரியல் எண்களைக் கொண்ட கையெறிகுண்டுகள் அடுத்தடுத்து பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் சீனா தயாரிப்பு 23 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சீனா தயாரிப்பு ஆளில்லா விமானங்களை பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் பறக்க விட்டு வேவு பார்த்ததும் ஆயுதங்களை விநியோகித்ததும் உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications