“கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த இந்த ஆண்டு ரூ.1673 கோடி ஒதுக்கீடு” - ரயில்வே அமைச்சர் தகவல்!
டெல்லி: ரயில்வே கட்டமைப்பில் கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த 2025-26ல் ரூ.1673.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், 2025 அக்டோபர் வரை கவாச் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட நிதி ரூ.2,354.36 கோடி என்றும் மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, எம்.பிக்களின் கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார். அப்போது அவர், "2014 ஆம் ஆண்டுக்கு முன், முந்தைய ஆட்சி காலத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.100 கோடி மட்டுமே பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் அது பல மடங்கு அதிகரித்து உள்ளது.

ஐரோப்பிய நாடுகளை விட இந்திய ரயில்வேயின் நேரம் கடைபிடிப்பு சிறப்பாக உள்ளது. இந்திய ரயில்வேயின் நேரம் கடைபிடிப்பு ஒட்டுமொத்தமாக 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவையின் தாக்கத்தை எடுத்துரைக்கிறது. பல ஐரோப்பிய நாடுகளை விட இந்திய ரயில்வே சரியான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
உத்தர பிரதேசத்தில், ரயில்வே திட்டங்களுக்கான பட்ஜெட்டை பிரதமர் உயர்த்தியுள்ளார், இது ஒரு வரலாற்று நடவடிக்கை. வரலாற்று கலாசார இணைப்புகளைக் கொண்ட பாலியா ரயில் நிலையத்திலிருந்து 82 ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு ஒரு முக்கிய காரணியாக இருப்பதால் ரயில்வே கீழ் பாலங்கள் மற்றும் மேம்பாலங்களில் பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக மேம்பாலங்களுக்காக 100 க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ரயில்வே கட்டமைப்பில் கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த 2025-26ல் ரூ.1673.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், 2025 அக்டோபர் வரை கவாச் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட நிதி ரூ.2,354.36 கோடி என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications