கீழடி அகழாய்வு அறிக்கை என்னாச்சு? மாநிலங்களவையில் புயலை கிளப்ப திமுக எம்பி திருச்சி சிவா நோட்டீஸ்!
டெல்லி: கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து ஆலோசிக்க கோரி மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா நோட்டீஸ் கொடுத்துள்ளார். அவையை ஒத்திவைத்துவிட்டு கீழடி குறித்து விவாதிக்க கோரிக்கை விடுத்துள்ளார். மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 21 ஆம் தேதி வரை நிகழ்கிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

இந்த கூட்டத் தொடரில், தேசிய விளையாட்டு நிர்வாகம், புதிய வருமான வரி, இந்திய துறைமுகங்கள். வணிக கப்பல் போக்குவரத்து, கோவா புராதன சின்னங்கள் பராமரிப்பு தொடர்பான மசோதாக்கள், தேசிய போதை மருந்துதடுப்பு, வணிகம் செய்வதை எளிதாக்குதல் (ஜன் விஸ்வாஸ்), ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், மணிப்பூர் ஜிஎஸ்டி, சுரங்கம், கனிமங்கள் தொடர்பான திருத்த மசோதாக்கள் ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. அனைத்து கட்சிகளும் தனித்தனியே ஆலோசனை கூட்டம் நடத்தி, எம்.பி.க்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. இந்த நிலையில், இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் உட்பட 20 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது 8 முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆலோசித்துள்ளன. அவை
1. பஹல்கம் தாக்குதல்
2. வெர்மிலியன் நடவடிக்கை
3. இடைநிறுத்தம் மற்றும் வர்த்தகம் பற்றிய ட்ரம்பின் அறிக்கை
4. பீகார் சட்டசபை தேர்தல்
5. வெளியுறவு கொள்கையின் தலைப்பு (பாக், சீனா, காஜா)
6. தொகுதி மறுவரையறை பிரச்சனை
7. நாட்டில் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட, பழங்குடி, பெண்கள் மற்றும் சிறுபான்மையின வகுப்பினரின் மீதான வன்கொடுமை
8. அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்டவை ஆகும்.
அது போல் தமிழக எம்பிக்கள் சார்பில் கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிடுவதில் தாமதம் ஏற்படுத்துவது குறித்தும் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடுவதில் மத்திய அரசு தாமதம் காட்டுவது குறித்து அவையை ஒத்திவைத்து ஆலோசிக்க மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார்.
கீழடியில் இரு அகழாய்வு அறிக்கைகளை இந்திய தொல்லியல் துறைக்கு தொல்லியல் இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.
மேலும் இந்த அறிக்கையில் கி.மு.8 ஆம் நூற்றாண்டு என உள்ளதை கி.மு.3 ஆம் நூற்றாண்டு என மாற்றுமாறு மத்திய அரசு, திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்துகிறது. ஆனால் அமர்நாத்தோ, "நான் தாக்கல் செய்த 982 பக்கங்களில் எழுத்துப் பிழையை வேண்டுமானால் திருத்த தயாராக இருக்கிறேன். அது போல் வரைப்படங்கள் ஏதாவது இல்லாமல் இருந்தால் அதை சேர்த்து தருகிறேன். ஆனால் உண்மையை திரித்து எழுத முடியாது. கிமு 8ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததை கிமு. 3 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தவை என மத்திய அரசு மாற்ற வலியுறுத்துகிறது.
நான் கண்டுபிடித்த விஷயங்களையே மாற்றச் சொன்னால் நான் குற்றவாளி ஆகிவிடுவேன். இது கீழடியின் தொன்மையை சிதைக்கும் செயலாகும். 982 பக்கத்தில் நான் குறிப்பிட்டுள்ளவை எல்லாம் ஆய்வின் அடிப்படையில் கண்டுபிடித்துள்ளவேயே தவிர எதுவும் அனுமானத்தின் அடிப்படையில் எந்த காலத்தையும் கண்டுபிடிக்கவில்லை. இவ்வாறு அமர்நாத் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications