Kerala Nuns: மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்!
ராய்பூர்: மத மாற்றம் மற்றும் ஆள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கேரளாவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு என்ஐஏ நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், தற்போது அவர்கள் விடுதலையாகி உள்ளனர்.
கேரளாவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் கடந்த 25ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இந்த கன்னியாஸ்திரிகளுடன் மூன்றாவதாக ஒரு இளம் பெண் இருந்தார். அவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர். இவரை கடத்துவதாக புகார் எழுந்த நிலையில், கன்னியாஸ்திரிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இளம்பெண் நாராயணன்பூரை சேர்ந்தவராவார். இவர் நீண்ட காலமாக கிறிஸ்தவத்தில் நாட்டம் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவருக்கான வேலைவாய்ப்புக்காக, கன்னியாஸ்திரிகள் இவரை வெளியூருக்கு அழைத்து சென்றுக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர், இளம்பெண் கடத்தப்படுவதாக புகார் அளித்தார். புகாரையடுத்து கன்னியாஸ்திரிகள் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் என்ஐஏ நீதிமன்றம் இன்று கன்னியாஸ்தவர்களுக்கு ஜாமீன் அளித்தது. ஜாமீனை தொடர்ந்து இரண்டு கன்னியாஸ்திர்களும் இன்று சிறையில் இருந்து வெளியே வந்திருக்கின்றனர்.
முன்னதாக கன்னியாஸ்திரி கைது குறித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தன. குறிப்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஜான் பிரிட்டாஸ், பாஜக எம்பிகளை பார்த்து சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தார்.
"மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பாஜக தலைவர் ஜே.பி நட்டா என பாஜக தலைவர்கள் பலர் கிறிஸ்தவ பள்ளிகளில் பயின்றுதன் வந்து இருக்கிறார்கள். அவர்களை யாராவது மதமாற்றம் செய்தார்களா? அவர்கள் இப்போதும் இந்துக்களாக தானே இருக்கிறார்கள்! அப்படி இருக்கையில் கன்னியாஸ்திரிகளை மட்டும் குறிவைப்பது ஏன்?" என்று நாடாளுமன்றத்தில் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications