உலகளவில் வெடித்த போராட்டம்.. சர்வதேச அளவில் பூதாகரமானதாக மாறும் கொல்கத்தா மருத்துவர் படுகொலை!
டெல்லி: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்டது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தைக் கண்டித்து இதுநாள் வரை நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்த நிலையில், இப்போது அது சர்வதேச அளவில் வெடித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 25+ நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன.
கடந்த மாதம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பின.

கொல்கத்தா பலாத்காரம்: இதற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், இப்போது அது சர்வதேச அளவில் வெடித்துள்ளன. நேற்றைய தினம் சுமார் 25 நாடுகளில் 130க்கும் மேற்பட்ட நகரங்களில் கொல்கத்தா பலாத்கார சம்பவத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. இதில் பல ஆயிரம் புலம்பெயர்ந்த இந்தியர்கள் கலந்து கொண்டனர்.
ஜப்பான், ஆஸ்திரேலியா, தைவான் மற்றும் சிங்கப்பூர் என்று உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் பெரிய மற்றும் சிறிய அளவில் போராட்டங்கள் நடந்தன. ஆசிய நாடுகள் மட்டுமின்றி பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா முழுக்க போராட்டங்கள் வெடித்தன. இந்தியாவில் ஏற்கனவே போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், இப்போது அது உலகெங்கும் வெடித்துள்ளன.
போராட்டங்கள்: ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மிகப் பெரிய பெரியளவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அங்குள்ள செர்கெல்ஸ் டோர்க் சதுக்கத்தில் கறுப்பு உடை அணிந்த பெண்கள் பெங்காலி மொழியில் பாடல்களைப் பாடி, இந்தியப் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனச் சொல்லி முழக்கங்களை எழுப்பினர்.
அங்குப் போராட்டத்தில் கலந்து கொண்ட தீப்தி ஜெயின் கூறுகையில், "பணியில் இருந்த இளம் பயிற்சி மருத்துவர் மருத்துவமனையிலேயே வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர குற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது" என்றார். இப்போது பிரிட்டன் நாட்டில் குடியுரிமை பெற்றுள்ள தீப்தி ஜெயின், கொல்கத்தாவில் தான் மருத்துவம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ: கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி பலாத்கார விவகாரத்தை முதலில் அம்மாநில போலீசார் தான் விசாரித்தனர். இருப்பினும், இந்த விவகாரத்தை அவர்கள் சரியாகக் கையாளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கில் இதுவரை சஞ்சய் ராய் என்ற நபர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும், இதில் கூட்டுப் பலாத்காரம் நடந்துள்ளதாகவே பலரும் விமர்சித்தனர். அதைக் கண்டித்தே நாடு முழுக்க போராட்டங்கள் நடந்தன. இருப்பினும், சிபிஐ தரப்பினர் இதுவரை நடத்திய விசாரணையில் கூட்டுப் பலாத்காரம் நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தீப் கோஷ் கைது: அதேபோல சிபிஐ தரப்பினர் குற்றம் நடந்தபோது முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் சந்தீப் கோஷ் பாலியல் குற்றத்திற்காகக் கைது செய்யப்படவில்லை. அவர் ஆர்ஜி கர் மருத்துவமனையில் நடந்த ஊழல் புகாரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications