பீகாரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேரணி சென்ற தொகுதியில் ரிசல்ட் இதுதான்.. காங்கிரஸுக்கு பேரிடி!
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில், பீகாரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேரணி சென்று உரையாற்றிய முசாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் 2 கட்டங்களாக நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் 203 தொகுதிகளில் வெற்றி முகத்தில் உள்ளது. பாஜக 90 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) 85 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், பீகாரில் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.

காங்கிரஸ் - ஆர்ஜேடி அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி வெறும் 35 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி வெறும் 6 தொகுதிகளிலும் மட்டுமே வென்றுள்ளது. இதன் மூலம், படுதோல்வியைப் பதிவு செய்துள்ளது இந்தக் கூட்டணி.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக பேரணியாகச் சென்ற பல இடங்களில் பாஜக அபார வெற்றியைப் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக பீகார் மாநிலம் முஸாபர்பூர் தொகுதியில் பிரசாரம் செய்திருந்தார். ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்டோருடன் ஒரே வாகனத்தில் பேரணியாகச் சென்றிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
முசாபர்பூரில் நடந்த பேரணியில் ஸ்டாலின் தமிழில் உரையாற்றினார். அவரது உரை இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. "கடந்த ஒரு மாதமாக, ஒட்டுமொத்த இந்தியாவும் பீகாரை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது... தேர்தல் ஆணையம் பாஜகவின் ரிமோட் கண்ட்ரோல் கைப்பாவையாக மாறிவிட்டது" என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
மேலும், "நாடு தழுவிய கூட்டணிக்கு (இந்தியா கூட்டணி) அடித்தளம் அமைக்கப்பட்ட இடம் பீகார். பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நான் மீண்டும் வருவேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று ஸ்டாலின் பேசி இருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் பேரணி நடத்திய முசாபர்பூர் தொகுதியில் என்.டி.ஏ கூட்டணியின் பாஜக வேட்பாளர் ரஞ்சன் குமார் 1,00,477 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான பிஜேந்திர சௌத்ரியைவிட 32,657 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிகாரின் சசாரம் நகரில் தொடங்கிய பேரணி, 16 நாள்கள் நடைபெற்று பாட்னாவில் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்தப் பேரணியில் ராகுல் காந்தியுடன் திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். எனினும், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
ராகுல் காந்தி, பீகாரின் சசராமில் தொடங்கி 25 மாவட்டங்கள், 110 சட்டசபை தொகுதிகள் வழியாக 1300 கி.மீ தூரம் பயணித்து பாட்னாவில் நிறைவு செய்தார். ராகுல் காந்தி பயணித்த தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட, காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை.












Click it and Unblock the Notifications