"கையெழுத்திட வந்த தமிழக முதல்வர்.. கடைசி நேரத்தில் நடந்த அரசியல்.." அமைச்சர் தர்மேந்திர பிரதான் பரபர
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று மும்மொழி கொள்கை தொடர்பாகக் காரசார விவாதம் நடந்தது. அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய சில கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கை தொடர்பாகவும் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு தொடர்பாகவும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் கட்டம் இன்று தொடங்கிய நிலையில், முதல் நாளே மும்மொழி கொள்கை குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. திமுக எம்பிக்களுக்கும் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் இடையே விவாதம் எழுந்தது. அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய சில வார்த்தைகளுக்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

தர்மேந்திர பிரதான்
இதையடுத்து குறிப்பிட்ட சில வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். அதேநேரம் புதிய கல்விக் கொள்கையில் தமிழக அரசு இணையவிருந்ததாகவும் கடைசி நேரத்தில் சில காரணங்களால் இணைய மறுத்துவிட்டதாகவும் கூறினார். இருப்பினும், அதற்கும் திமுக எம்பிக்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மீண்டும் அதே கருத்தைத் தான் கூறினார். இதை ஒப்புக்கொள்ளத் தயாராக இருந்த தமிழக அரசு, திடீரென பின்வாங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், தனது மகள் மூன்றாவது மொழியாக மராத்தியை கற்றதாகவும் தமிழகத்திலும் கூட ஏற்கனவே சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கொள்கையே அமலில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அரசியல் நடந்துவிட்டது
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "தமிழ்நாடு ஒரு சமயத்தில் இதை ஏற்றுக் கொள்வதாகவே சொன்னது. பிறகு ஏதோ நடந்துவிட்டது. தமிழக முதல்வர் இதில் கையெழுத்துப்போட இருந்தார். ஆனால், திடீரென ஏதோ அரசியல் நடந்துவிட்டது. அவர்கள் பின்வாங்கிவிட்டனர். இது துரதிருஷ்டவசமானது. அவர்கள் மீண்டும் இத்திட்டத்தில் இணைய வேண்டும் என நான் இதன் மூலம் கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன்.
யாரும் எதையும் திணிக்கவில்லை
தமிழைப் பயிற்று மொழியாக இருக்கக்கூடாது எனத் தடுத்தது யார்? 8ம் வகுப்பு வரை தாய் மொழியிலேயே பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என்றே புதிய தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. தமிழ்நாடு உட்பட எந்தவொரு மாநிலத்திலும் எந்தவொரு மொழியையும் யாரும் திணிக்கவில்லை. அரசியல் காரணமாகவே அவர்கள் மும்மொழி கொள்கையை எதிர்க்கிறார்கள். இது தொடர்பாக விவாதிக்க நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் விவாதத்திற்கு வரலாம்.. என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சொல்லலாம். அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.
எனது மகள் மராத்தி படித்தார்
வடமாநில குழந்தைகள் பலரும் மூன்று மொழிகளை கற்கிறார்கள். எனது மகள் படிக்கும்போது மராத்தியையே மூன்றாவது மொழியாகக் கற்றார். தமிழ்நாட்டிலும் உள்ள பல நூறு சிபிஎஸ்இ பள்ளிகளிலும் கூட மும்மொழி கொள்கை தான் பின்பற்றப்படுகிறது. ஆனால், அதை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டுப் பேசி வருகிறார்கள். அவர்களிடம் எந்தவொரு முறையான முறையான காரணமும் இல்லை. அரசியலுக்காகவே எதிர்த்து வருகிறார்கள்" என்றார்.
காங்கிரஸ் மீது தாக்கு
காங்கிரஸ் கட்சியும் இப்போது மும்மொழி கொள்கையை எதிர்ப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த தர்மேந்திர பிரதான், "திமுகவுக்கு வரலாற்று ரீதியாக இதில் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. தொடர்ந்து எதிர்த்தே வந்துள்ளனர். ஆனால், காங்கிரஸை பாருங்கள்.. அவர்களிடம் இப்போது எந்தவொரு ஐடியாவும் இல்லை.. இதன் காரணமாகவே அவர்கள் இப்போது மும்மொழி கொள்கையை எதிர்க்கிறார்கள்.
ஒரு காலத்தில் மும்மொழி கொள்கையை அறிமுகப்படுத்தியதே அவர்கள் தான். ஆனால், இப்போது அவர்களே எதிர்க்கிறார்கள். கடந்த காலங்களைப் பாருங்கள் தெரியும். அவர்கள் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டனர். ஐடியாக்களும் இல்லாமல் தவித்து வருகிறார்கள்" என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.












Click it and Unblock the Notifications