"பொது சிவில் சட்டம்!" ஜூலை 28 வரை கருத்துகளை கூறலாம்.. கால அவகாசம் நீட்டிப்பு! மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு இப்போது உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில காலமாகவே மீண்டும் பொது சிவில் சட்டம் தான் இங்கே பேச்சாக இருக்கிறது. அதாவது நாட்டில் இப்போது அனைத்து வித கிரிமினல் வழக்குகளுக்கும் ஒரே சட்டம் தான் இருக்கிறது.

இருப்பினும், ஒரே சிவில் சட்டங்கள் என்பது மதங்களைப் பொறுத்து மாறுகிறது. இதை மாற்றி நாடு முழுக்க ஒரே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்,
பாஜக இதைத் தேர்தலிலேயே வாக்குறுதியாகக் கூறியிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிப் பல பாஜக தலைவர்கள் இது குறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி,"இந்தியாவிற்கு இப்போது தேவை பொது சிவில் சட்டம் தான். ஒரு நாடு எப்படி இரண்டு வேறு வேறு சட்டங்களைக் கொண்டு இயங்க முடியும்" என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே இது குறித்து கருத்துக் கேட்பது தொடர்பாக மத்திய அரசு கடந்த மாதம் 14ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த பொது சிவில் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்தனர்.
நேற்று வரை பொது சிவில் சட்டம் குறித்து 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். இதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. இருப்பினும், பல்வேறு தரப்பினரும் இதன் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு இப்போது உத்தரவிட்டுள்ளது. அதன்படி மேலும் இரண்டு வாரங்களுக்கு, அதாவது வரும் ஜூலை 28ஆம் தேதி வரை பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications