வெளிநாட்டு மாப்பிள்ளை மோகம்.. அதிர வைக்கும் மோசடிகள்.. கடிவாளம் போட வருகிறது புதிய சட்ட திருத்தம்
டெல்லி: திருமண மோசடிகளை தடுக்க, இனி வெளிநாடு வாழ் இந்தியர்கள்(NRI) இந்தியாவில் உள்ளவர்களை திருமணம் செய்யும் போது அது கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு சட்டத்தை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
வெளிநாட்டு மாப்பிள்ளைக்கும், மணப்பெண்ணுக்கும் இந்தியாவில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்களது மகள்களை திருமணம் செய்து வைத்துவிட்டால், அவர்களது வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்று பெற்றோர்கள் கனவு காண்கிறார்கள். இதுபோன்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க மறுபுறம், இந்த எதிர்பார்ப்புகளை வைத்து மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. இதனால் அதிக அளவு பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண சில பரிந்துரைகளை மத்திய அரசுக்கு, சட்ட ஆணையம் வழங்கியுள்ளது. 22வது சட்ட ஆணையத்தின் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளார். அதன்படி இனி வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் (என்ஆர்ஐ) இந்தியாவில் வசிக்கும் பெண்களையோ, ஆண்களையோ திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அந்த திருமணம் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மட்டுமின்றி, வெளிநாட்டை சேர்ந்தவர்களும்(OCI) இந்தியர்களை திருமணம் செய்துக்கொண்டால் அது கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். இப்படி பதிவு செய்யப்படும் திருமணங்களின் பதிவு எண்கள் பாஸ்போர்ட்டில் இடம்பெற்றிருக்கும். இதற்காக பாஸ்போர்ட்டில் திருத்தம் கொண்டு வரவும் சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. பதிவு செய்யப்படும் திருமணங்களின் டேட்டாக்கள் அனைத்தும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் பராமரிக்கப்படும்.
இதன் மூலம் திருமண மோசடிகளை கட்டுப்படுத்த முடியும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த பரிந்துரைகள் விவாகரத்து, வாழ்க்கைத் துணை பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு மற்றும் NRIகள் மற்றும் OCIகளுக்கு சட்ட ஆவணங்களை வழங்குதல் போன்ற சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இப்படியான திருமணங்களில் ஒருவேளை பிரச்னை ஏற்பட்டு NRI கணவரை மனைவி பிரிந்து சென்றால், அப்பெண்ணை பாதுகாப்பதற்கான அனைத்து அம்சங்களையும் இந்த பரிந்துரையில் வழங்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது NRI பற்றிய விரிவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வரையறையின் அவசியத்தையும் ஆணையம் பரிந்துரைத்தது.
கடந்த 2015ம் ஆண்டை விட 2023ம் ஆண்டு NRI கணவர்களால் கைவிடப்பட்ட இந்திய பெண்களின் எண்ணிக்கையானது இரட்டிப்பாக அதிகரித்திருக்கிறது. இது தொடர்பாக சராசரியாக ஒரு நாளைக்கு 4 புகார்கள் வருகின்றன. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை NRIஐ கணவரை பிரிந்த பெண்கள் சுமார் 5,339 பேர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார்களை அனுப்பியுள்ளனர். இந்த பின்னணியில்தான் சட்ட ஆணையம் NRI திருமணங்கள் குறித்த பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications