“வாங்க.. நம்ம ஜனநாயகத்தை இன்னும் துடிப்பானதாக்குவோம்”.. இறுதிக்கட்ட தேர்தல் நாளில் மோடி அழைப்பு!
டெல்லி: வாரணாசி உட்பட நாட்டின் 57 லோக்சபா தொகுதிகளில் இன்று இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
நாடு முழுவதும் ஏப்ரல்19 ஆம் தேதி முதல் நடந்து வரும் மக்களவை தேர்தல் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இன்று இறுதிகட்டமாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இறுதிகட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் இன்று மாலை 6.30 மணிக்கு மேல் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாக உள்ளன.

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் 13 தொகுதிகள் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் 4 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், சண்டிகர் தவிர ஜார்கண்டில் 3 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அதேபோல் ஒடிசாவில் 41 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாச்சலப் பிரதேசத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது. இறுதி கட்டமாக இன்று தேர்தல் நடக்கும் 57 தொகுதிகளில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இறுதி கட்ட தேர்தலில் 10.02 கோடி பேர் இன்று வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1.09லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடுகிறார். பிரதமர் மோடிக்கு எதிராக அஜய் ராய் (காங்கிரஸ்), அதர் ஜமால் லாரி (பிஎஸ்பி), கோலிசெட்டி சிவ குமார் (யுக துளசி கட்சி), ககன் பிரகாஷ் யாதவ், (அப்னா தளம், காமராவதி), மற்றும் சுயேச்சைகள் தினேஷ் குமார் யாதவ், சஞ்சய் குமார் திவாரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வாரணாசி தொகுதியில் போட்டியிட 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 33 பேரின் வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட்டன. ஒருவர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அதன்படி, வாரணாசியில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் உட்பட 7 பேர் மட்டுமே தற்போது களத்தில் உள்ளனர்.
வாரணாசி மக்களவைத் தொகுதி பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்த தொகுதியில் 1991ஆம் ஆண்டு முதல் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இடையில், 2004ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மட்டுமே காங்கிரஸின் ராஜேஷ் குமார் மிஸ்ரா அங்கு வெற்றி பெற்றார்.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக் கட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானத்தில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் மோடி. இன்று பிற்பகலில் தியானத்தை முடித்துக்கொண்டு டெல்லி செல்ல உள்ளார்.
இந்நிலையில் அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று 2024 நாடாளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்டம். இளைஞர்கள் மற்றும் இளம் பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன். ஒன்றாக இணைந்து நமது ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாகவும், பங்கேற்பு மிக்கதாகவும் மாற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications