டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி? சூசகமாக கூறிய துணை நிலை ஆளுநர்.. அச்சத்தில் ஆம் ஆத்மி
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு நடந்திருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என ஆளுநர் சக்சேனா சூசகமாக கூறியுள்ளார்.
கடந்த 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தனர். இதற்கு முன்னர் ஜார்க்கண்ட் முதல்வரை கைது செய்த போது, அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆனால், கெஜ்ரிவால் சிறையிலிருந்து ஆட்சியை நடத்துவார் என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது. எனவே, முதலமைச்சராக இருந்தபோதே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்திய வரலாற்றில் இப்படியொரு கைது சம்பவம் நடந்ததே கிடையாது.

கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் கூட இரண்டு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். மக்களின் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைகளை தீர்க்க நீர்வளத்துறை அமைச்சர் அதிஷிக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். இது கெஜ்ரிவாலின் முதல் உத்தரவாகும். இரண்டாவதாக மொஹல்லா கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் நோயறிதல் சோதனைகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறும் சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜுக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஏற்கெனவே ஆம் ஆத்மி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த பாஜக, கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாதது குறித்தும் சரமாரியாக விமர்சிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சூசகமாக கூறியுள்ளார்.
தனியார் செய்தி ஊடகத்தின் மாநாட்டில் பங்கேற்றிருந்த அவர், "சிறையிலிருந்து ஆட்சி நடத்தப்படாது என்று டெல்லி மக்களுக்கு என்னால் உறுதியளிக்க முடியும். வரும் மாதங்களில், டெல்லியை உலகத் தரம் வாய்ந்த தலைநகராக மாற்றும் முயற்சிகளை தீவிரப்படுத்துவோம்" என்று கூறியுள்ளார். ஆளுநரின் இந்த கருத்து ஆம் ஆத்மியிடம் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஆட்சி நிர்வாகம் சீராக இயங்கவில்லை என்று கூறி, அரசியலமைப்பின் 239 AA மற்றும் ABயை பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக ஆம் ஆத்மி சந்தேகித்திருக்கிறது.
ஏற்கெனவே கெஜ்ரிவால் கைது விவகாரம் சர்வதேச அளவில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. கெஜ்ரிவாலுக்கு உரிய சட்ட வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த அமெரிக்கா "அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட செய்திகளை அமெரிக்க அரசு கண்காணித்து வருகிறது. சிறையில் உள்ள டெல்லி முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்டச் செயல்முறையை உறுதி செய்ய, இந்திய அரசை ஊக்குவித்து வருகிறோம்" என்று கூறியிருந்தது. ஜெர்மனியும் இதே போன்ற கருத்தை தெரிவித்திருந்தது.
இப்படி இருக்கையில் ஆளுநரின் கருத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கிதான் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும் விமர்சித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications