ஆஹா கொரோனா மாதிரியே இருக்கே.. எல்லை கட்டுப்பாடுகள், டெஸ்டிங் தீவிரம்? மங்கி பாக்ஸால் இந்தியா அலர்ட்
டெல்லி: கொரோனா பெருந்தொற்றாக உலக நாடுகளை எந்தளவுக்குப் படுத்தி எடுத்தது என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இப்போது மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ள நிலையில், இது அடுத்து ஒரு பெருந்தொற்றாக வெடிக்கும் என்று பலரும் அச்சத்தில் உள்ளனர்.
மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை இப்போது பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பும் கூட இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பைச் சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது.

மேலும், ஐரோப்பிய நாடான சுவீடன், பாகிஸ்தான் நாடுகளிலும் மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் உலக நாடுகள் மங்கி பாக்ஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.
மங்கி பாக்ஸ்: குறிப்பாக இந்தியாவில் மங்கி பாக்ஸ் பாதிப்பைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையங்கள், துறைமுகங்களில் வெளிநாடுகளில் இருந்து வருவோரைக் கண்காணிக்க அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது. மேலும், அண்டை நாடுகளான பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லை பகுதிகளிலும் இதன் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச பயணிகளை எச்சரிக்கையாகக் கண்காணிக்கும்படி எல்லையில் உள்ள அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் இதுவரை யாருக்கும் மங்கி பாக்ஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருப்பினும், ஒரு வேளை மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தவும் சிகிச்சை அளிக்கவும் டெல்லியில் மூன்று அரசு மருத்துவமனைகள் தேவையான வசதிகளுடன் தயார் நிலையில் இருக்கிறது. ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் லேடி ஹார்டிங் மருத்துவமனைகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
தயார் நிலையில் மருத்துவமனைகள்: மேலும், ஒரு வேளை மங்கி பாக்ஸ் பாதிப்புகள் அதிகரித்தால் நிலைமையைக் கையாள மருத்துவமனைகளைத் தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த மருத்துவமனைகள் நோடல் மையங்களாகச் செயல்படும் என்றும் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை இந்த மையங்கள் அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா, மங்கி பாக்ஸ் பாதிப்பைச் சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யச் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தினார். மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டால் விரைவான நடவடிக்கை மூலம் அது பரவாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
வித்தியாசமான திரிபு: இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "மங்கி பாக்ஸ் பொதுவாக வேகமாகப் பரவாது. இதனால் கொரோனா போன்ற நிலை ஏற்பட வாய்ப்பு குறைவு. அதேநேரம் இப்போது பரவும் வைரஸ் திரிபு முந்தைய வேரியண்டுகளில் இருந்து வேறுபட்டது. இவை மிகவும் தீவிரமானது. இதனால் நாம் நிலைமையை மிகவும் கவனமுடனேயே கையாள வேண்டும்" என்றார்.
சுகாதார அமைச்சகம்: மங்கி பாக்ஸ் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவதற்காக நாடு முழுக்க ஆய்வகங்கள் தயார் நிலையில் தயாராக இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்குச் சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது, நாட்டில் உள்ள 32 ஆய்வகங்களில் மங்கி பாக்ஸ் பரிசோதனை செய்யும் வசதி இருக்கிறது. இதை மேலும் அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications