‛எச்சரித்த உளவுத்துறை’.. ராகுலை போல் ‛இசட் பிளஸ்’ பாதுகாப்பில் மல்லிகார்ஜுன கார்கே! ஷாக் காரணம்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்கிடையே மத்திய உளவுத்துறை எச்சரிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன கார்கே. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். தற்போது ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் பொறுப்பில் இருந்து சோனியா காந்தி விலகிய பிறகு மல்லிகார்ஜுன கார்கே தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் தான் சந்திக்க உள்ளது. அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில் மல்லிகார்ஜுன கார்கே பல்வேறு இடங்களுக்கு சென்று காங்கிரஸ் பொதுக்கூட்டங்கள், ராகுல் காந்தியின் ‛பாரத் ஜோடோ நியாய யாத்திரை' நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார்.
இந்நிலையில் தான் மல்லிகார்ஜுன கார்கேவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக உளவுத்துறை சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற திடுக்கிடும் தகவல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை சீரியஸாக எடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளில் ஒன்று. அதாவது எஸ்பிஜி பாதுகாப்புக்கு அடுத்த பெரிய பாதுகாப்பு என்பது இசட் பிளஸ் தான். 2019ம் ஆண்டு வரை சோனியா காந்தியின் குடும்பத்துக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு அந்த பாதுகாப்பு இசட் பிளஸ்ஸாக குறைக்கப்பட்டது.
அதன்படி மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் ராகுல் காந்தியை போல் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த இசட் பிளஸ் பாதுகாப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பல்வேறு மாநில முதல்வர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications