"ஆச்சரிய" பாஜக.. "அடடே" ஆர்எஸ்எஸ்.. எதிர்ப்பின்றி நிறைவேறிய "127வது சட்ட மசோதா".. பின்னணி என்ன?
127 சட்ட திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது
டெல்லி: அரசியல் சட்ட 127 திருத்த மசோதா அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.. வழக்கமாக எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரித்துள்ளன.
மாநில அதிகாரங்களை மத்திய அரசு பறித்து கொண்டு வருவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.. அதற்கேற்றபடி, கடந்த 2018-ல் அரசியலமைப்பு சட்டத்தின் 102-வது திருத்தத்தின் மூலம், சமூக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்காக, மாநில அரசுகளுக்கு இருந்த அதிகாரம் நீக்கப்பட்டது...
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கும் தொடுக்கப்பட்டது..

கோர்ட்
இதை விசாரித்த கோர்ட்டும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்காக மாநில அரசுகளுக்கு இருந்த அதிகாரத்தை நீக்கியது.. கூடுதல் ஜாதிகளை ஓபிசி பட்டியலில் மாநில அரசுகள் சேர்க்க முடியாது, மத்திய அரசுதான் அதை நிர்ணயிக்கும் என்று தீர்ப்பளித்தது.

கோரிக்கை
இந்நிலையில் தான், 27% இட ஒதுக்கீட்டுக்கான இதர பிற்படுத்தப்பட்டோர் அதாவது ஓபிசி பட்டியலில் எந்தெந்த சாதியினரை சேர்ப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மறுபடியும் மாநில அரசுகளுக்கே வழங்கிட பல்வேறு மாநில அரசுகளும் கோரிக்கை விடுத்தன. இதில் பாஜக ஆளும் மாநிலங்களும் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக ஆர்எஸ்எஸ் அமைப்பும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து அரசியலமைப்பு 127 ஆவது சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்தது மத்திய அரசு.

ஆதரவு
வழக்கமாக மசோதா நிறைவேறுகிறது என்றால், அதற்கு வெளிநடப்பு நடக்கும், எதிர்ப்பும் இருக்கும்.. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், மொத்த கட்சிகளும் சேர்ந்து இந்த மசோதாவுக்கு ஆதரவு தந்தார்கள்.. அதாவது, இதற்கு ஆதரவாக 386 பேர் வாக்களித்தனர். ஒருவர் கூட மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பதுதான் ஹைலைட்.

அதிகாரம்
அதுவும் இத்தனை நாள், அமளியில் இருக்கும் கூட்டத்தொடருக்கு நடுவே, இப்படி ஒரு மகிழ்ச்சி செய்தி அரங்கேறி உள்ளது.. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எந்தெந்த சாதியினரை சேர்ப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்கும் இந்த மசோதாவை திமுக மனமுவந்து வரவேற்று ஆதரவு தந்துள்ளது... ஏனென்றால், ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடமே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதில் திமுகவும் ஒன்று.. இதற்காகவே சம்பந்தப்பட்ட துறை ரீதியான அமைச்சரை சந்தித்து வலியுறுத்தவும் செய்திருந்தனர்.

திமுக
இப்போது மசோதா நிறைவேறி உள்ளதையடுத்து, சமூகநீதி களத்தில் வென்றெடுக்கப்பட்ட முக்கிய வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது.. இதன்மூலம் 671 பிற்படுத்தப்பட்ட ஜாதி பிரிவினர் பெரிதும் பலன்பெறுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.. ஆனால், இதை பாஜக முதலிலேயே செய்திருக்கலாம்.. அதாவது மாநில உரிமையை பறிக்காமல் இருந்திருக்கலாம்.. தேவையில்லாமல் சாதியை தொட்டு, இப்போது ஜகா வாங்கி உள்ளது.. அதுவும் சுப்ரீம் கோர்ட் கண்டித்தபிறகு, மனம் மாறி உள்ளது..

பலன்
ஒருவேளை இது தேர்தலுக்கான யுக்தியாக இருக்குமோ என்றுகூட தெரியவில்லை.. ஏனென்றால், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளன.. அதையெல்லாம் மனதில் வைத்து கொண்டுதான் இந்த மசோதாவுக்கு ஆர்எஸ்எஸ்ஸும் ஆதரவு தந்தது, பாஜகவும் இறங்கி வந்தது என்று சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும், மக்களுக்கு பிரதான பலன் கிடைத்துள்ளதுடன், மாநிலங்களுக்கான உரிமையும் மீண்டும் கிடைத்துள்ளது மகிழ்ச்சியே..!












Click it and Unblock the Notifications