நாளை 3ஆம் கட்ட தேர்தல்..ஆவலுடன் காத்திருக்கும் அரசியல் கட்சிகள்! ஒரு தொகுதியில் தேர்தல் தள்ளி வைப்பு!
டெல்லி: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில் நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பதினெட்டாவது மக்களவைக்கான 543 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் லோக்சபா தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஒன்றாம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நடக்கும் நிலையில் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளிலும், 26ஆம் தேதி 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலானது நடைபெற்றது.
இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள நான்கு தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், சத்தீஸ்கரில் ஏழு தொகுதிகள், தத்ரா நகர் ஹவேலி மற்றும் டையூ டாமன் யூனியன் பிரதேசங்களில் இரண்டு தொகுதி, கோவாவில் இரண்டு தொகுதி, குஜராத்தில் 25 தொகுதி, கர்நாடகாவில் 14 தொகுதி, மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்பது தொகுதி, மகாராஷ்டிரா மாநிலத்தில் 11 தொகுதி, உத்தரப்பிரதேசத்தில் பத்து தொகுதிகள் மேற்கு வங்கத்தில் நான்கு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, டிம்பிள் யாதவ், சிவராஜ் சிங் சவுகான், சுப்ரியா சூலே உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களோடு 1352 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடக்கவிருக்கும் நிலையில், வாக்காளர்கள் வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.
மொத்தம் பத்து மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஆளுங்கட்சித் தலைவர்களும், ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
கடைசி நாளான நேற்று உத்தர பிரதேச மாநிலத்தில் எட்டாவா, அயோத்தி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவருடன் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பெதோல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் காலமானதால் ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டு இருந்த தேர்தல் நாளை நடக்கவிருக்கிறது. மேலும் நாளை தேர்தல் நடக்க ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்-ரஜோரி மக்களவை தொகுதியில் தேர்தல் நடக்க இருந்த நிலையில் பனிபொழிவு காரணமாக நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த தொகுதியில் நடக்கவிருந்த தேர்தல் மே 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications