லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 88 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
டெல்லி: லோக்சபா 2 ம் கட்ட தேர்தல் கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தயார் நிலையில், வைத்துள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு என மொத்தம் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.

நாளை வாக்குப்பதிவு: இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. கேரளாவில் உள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளுக்கும் அதாவது 20 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கிறது. இதேபோல் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. இதுபோக மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்தியபிரதேசம் என மொத்தம் 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 88 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது.
கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), உத்தரபிரதேசம் (8), மகாராஷ்டிரா (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), மேற்கு வங்கம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது.
கேரளாவில் லோக்சபா தேர்தல்: இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் இங்கு பிரசாரம் ஓய்ந்தது. நாளை தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆனையம் செய்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகள் வேகமெடுத்து உள்ளன.
மொத்தம் உள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கிறது. 20 தொகுதிகளில் 194 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். கேரளாவில் மும்முனை போட்டி நிலவுகிறது. தற்போது மாநிலத்தை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி என 3 முனை போட்டி உள்ளது.
வயநாடு தொகுதி: கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மாநிலத்தில் 19 இடங்களில் வென்றது. மார்க்சிஸ்ட் தலைமையிலான முன்னணி ஆலப்புழா தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது. பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா கூட்டணியில் காங்கிரசும், இடதுசாரிகளும் அங்கம் வகித்திருந்தாலும், கேரளாவில் எதிரெதிர் துருவங்களாக மோதுவது இந்த லோக்சபா தேர்தல் களத்தில் சுவாரசியத்தை அதிகரித்துள்ளது.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். தேசிய அளவில் காங்கிரசின் முகமாக இருக்கும் ராகுல் காந்தி, நாளைய தேர்தலில் நட்சத்திர வேட்பாளராக உள்ளார். இதனால் இந்த முறை யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் எப்படி?: கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில் நாளை முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த 14 தொகுதிகளில் 26 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 247 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். கர்நாடகா துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரர் சுரேஷ், மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிடுகின்றனர்.
ராஜஸ்தான், மகாராஷ்டிரா: மத்திய பிரதேசத்தின் 6 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 80க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு பாஜக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. மத்திய பிரதேசத்தின் பெதுல் லோக்சபா தொகுதியில் ஏப்ரல் 26-ல் வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பகுஜன் சமாஜ் வேட்பாளர் அசோக் பலாவி காலமானதால் மே 7-ந் தேதிக்கு வாக்குப் பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் நாளை 13 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இங்கு 152 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறிப்பாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, 2 மத்திய அமைச்சர்கள், பாஜக மாநில தலைவர் உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முக்கிய வேட்பாளர்கள்: இதேபோல், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் களத்தில் உள்ளார். இதைப்போல பாஜக முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் சிங் போட்டியிடுகிறார். முக்கிய வேட்பாளர்கள்: நாளை நடக்கும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தேஜஸ்வி சூர்யா, சசிதரூர், ஹேமமாலினி, டிகே சிவகுமாரின் சகோதரர் சுரேஷ், முன்னாள் முதல்வர் குமாரசாமி, நடிகர் சுரேஷ்கோபி, கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே. அந்தோணி மகன் அனில் அந்தோணி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
லோக்சபா தேர்தல்: உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், இந்த லோக்சபா தேர்தல் களம் கோடை வெயிலை தாண்டியும் அனல் பறந்து வருகிறது. ஏற்கனவே 2 முறை மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த முறை வெற்றி பெற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதேபோல் இந்த முறை தேசிய ஜனநாய கூட்டணியை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் என எதிர்க்கட்சிகள் ஓரணியாக உருவாகி இந்தியா கூட்டணி என ஒரு கூட்டணியை உருவாக்கி பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்து வருகின்றன. யார் யார் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு வருகிற ஜூன் 4 ம் தேதி விடை கிடைத்துவிடும்.












Click it and Unblock the Notifications