ஓயவிடாத “இந்தியா” கூட்டணி? இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமர் மோடி இன்று முதல் ஆலோசனை நடத்த உள்ளார்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்வைத்து அனைத்து அரசியல் கட்சிகளும் படுதீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. "இந்தியா" கூட்டணி அடுத்த லோக்சபா தேர்தல் களத்தில் பெரும் சவாலாக இருக்கும் என்பதால் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அண்மையில் ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டணியில் மொத்தம் 38 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனையை முன்வைத்து ஒட்டுமொத்த "இந்தியா" கூட்டணி எம்பிக்களும் ஒருங்கிணைந்து போராடுகின்றனர். இதனால் கடந்த ஒரு வார காலமாக நாடாளுமன்றத்தை முடக்கி வைத்துள்ளன எதிர்க்கட்சிகள். இதனைத் தொடர்ந்து 21 எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஒன்றாக மணிப்பூர் மாநிலம் சென்று, மணிப்பூர் நிலைமைகளை ஆய்வும் செய்து டெல்லி திரும்பினர். மேலும் அடுத்த "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
"இந்தியா" கூட்டணியின் இந்த விஸ்வரூபம் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தொடர்ந்து நெருக்கடி தந்து வருகிறது. இதை எதிர்கொள்ளும் விதமாக பிரதமர் மோடி இன்று முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டணியின் கட்சிகள் பலவற்று லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள் இல்லை. பிரதமர் மோடியின் கூட்டணி கட்சி எம்.பிக்களுடனான இந்த சந்திப்பு அடுத்த 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறுமாம். இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் கூட்டணி கட்சி எம்.பிக்களுடன் முதல் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.












Click it and Unblock the Notifications