லோக்சபா தேர்தலுக்கு முந்தைய காலிறுதி கேம்-3: காங்கிரஸை "ஆழ குழி தோண்டி புதைத்த" நாகாலாந்து தேர்தல்!
டெல்லி: தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் லோக்சபா தேர்தலுக்கு முந்தைய ஆட்டமாக பார்க்கப்படுகிறது. 2023-ல் நாகாலாந்து சட்டசபை தேர்தலில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
நாகாலாந்து மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 31 இடங்கள்.

நாகாலாந்து மாநிலத்தில் பாஜகவும் மாநில கட்சியான என்டிபிபியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. என்டிபிபி 40 இடங்களிலும் பாஜக 20 இடங்களிலும் போட்டியிட்டன. நாகா மக்கள் முன்னணி கட்சி 22 இடங்களிலும் காங்கிரஸ் 23 இடங்களிலும் போட்டியிட்டன.
லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பாஸ்வான்) 16, தேசியவாத காங்கிரஸ் 12, என்பிபி 12, ஆர்பிஐ( அத்வாலே) 8, ஐக்கிய ஜனதா தளம் ஜேடியூ-7 ; ராஷ்டிரிய ஜனதா தளம் ஆர்ஜேடி 3, சிபிஐ 1 இடத்திலும் போட்டியிட்டன.
நாகாலாந்து தேர்தல் முடிவுகள்: என்டிபிபி- 25; பாஜக -12; தேசியவாத காங்கிரஸ் 7, என்பிபி 5, சுயேட்சைகள் 4, லோக் ஜனசக்தி- 2, நாகா மக்கள் முன்னணி- 2, ஆர்பிஐ (அத்வாலே) 2, ஜேடியூ-1. பாஜக- என்டிபிபி கூட்டணி 37 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. இன்று இந்தியா கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 7 பேருமே நாகாலாந்து மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
நாகாலாந்து மாநிலத்தில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. 2008-ம் ஆண்டு தேர்தலில் நாகாலாந்தில் காங்கிரஸ் 23 இடங்களில் வென்றது. 2013-ல் வெறும் 8 இடங்களுக்கு தள்ளப்பட்டது காங்கிரஸ். 2018, 2023 தேர்தல்களில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அதாவது நாகாலாந்து மாநிலத்தில் காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டுவிட்டது.
லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை நாகாலாந்து தொகுதியில் 1999-ம் ஆண்டுக்குப் பின்னர் காங்கிரஸ் வெற்றி பெறவே இல்லை. வரும் லோக்சபா தேர்தலிலும் கூட நாகாலாந்து லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வெல்லவே வெல்லாது என்பதற்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் முன்னோட்டமாக அமைந்துள்ளன.












Click it and Unblock the Notifications