பஞ்சாப்பில் ‛முட்டை’.. பீகாரிலும் சறுக்கும் பாஜக! ‛இந்தியா’ கூட்டணி குஷி.. பரபர கருத்து கணிப்பு
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பீகார் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் உள்ளது. மாறாக இந்த கருத்து கணிப்பால் ‛இந்தியா' கூட்டணி உற்சாகமடைந்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தற்போதே அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.

அதேவேளையில் பாஜகவும் வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மாநிலங்கள் வாரியாக அந்தந்த கட்சிகள் சர்வேக்களை தொடங்கி உள்ளன. அதேபோல் பல்வேறு அமைப்புகள் சார்பில் கருத்து கணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கருத்து கணிப்புகளின் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஆம்ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் மற்றும் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கும் பீகார் மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
பீகார் மாநிலத்தை பொறுத்தமட்டில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இவர் பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் கூட்டணியை முறித்து கொண்டார். அதன்பிறகு லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்து மீண்டும் முதல்வரானார். தற்போதைய சூழலில் இந்த கூட்டணிக்கு அதிக எம்எல்ஏக்கள் உள்ளன. வரும் தேர்தலிலும் இவர்கள் ‛இந்தியா' கூட்டணி பெயரில் போட்டியிட உள்ளது உண்மையில் பாஜகவுக்கு பெரிய சவாலாக மாறிப்போயுள்ளது.
அதாவது பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. ‛இந்தியா' கூட்டணி 27 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 13 இடங்களில் மட்டுமே வெல்லும் என ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம்ஆத்மி ஆட்சியை பிடித்தது. பஞ்சாப்பை பொறுத்தமட்டில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில் தான் பஞ்சாப் மாநிலத்தில் ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கருத்து கணிப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இது பாஜகவுக்கு பெரிய அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது.
பஞ்சாப்பில் மொத்தம் 13 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் அனைத்து தொகுதிகளிலும் ‛இந்தியா' கூட்டணி வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பை பொறுத்தமட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என இந்த கருத்து கணிப்பு கூறியுள்ளது. பஞ்சாப்பை பொறுத்தமட்டில் ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்புகள் பலமாக உள்ளன. இருகட்சிகளும் ‛இந்தியா' கூட்டணியில் உள்ளதால் பாஜகவுக்கு இங்கு கடும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications