மணிப்பூரில் அமைதி திரும்ப தீர்மானம்.. அமித் ஷா கோரிக்கையை ஏற்று லோக்சபாவில் நிறைவேற்றம்!
டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதைத்தொடர்ந்து, மணிப்பூரில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்கக் கோரி மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமித்ஷா வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை, மணிப்பூர் அரசை ஏன் கலைக்கவில்லை என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. மணிப்பூர் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று நடந்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

அப்போது பேசிய அமித் ஷா, "பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. அப்படியான மாயத் தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் உண்மையான குணம் என்ன என்பதை இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அம்பலப்படுத்தும். இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
அரசைப் பாதுகாக்க ஊழல் செய்வது என்பதுதான் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குணம். 1947ல் நாடு சுதந்திரமடைந்ததற்கு பிறகு மிகப்பெரிய அளவில் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிரதமர் என்றால், அவர் நரேந்திர மோடிதான். பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்ததால் தான் பாஜகவை 2 முறை ஆட்சி அமைக்க தேர்ந்தெடுத்துள்ளனர்.
மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு மிகப் பெரிய புகழ் இருக்கிறது. நாட்டு மக்களுக்காக அவர் ஓய்வின்றி உழைக்கிறார். நாள்தோறும் 17 மணி நேரம் தொடர்ச்சியாக அவர் உழைக்கிறார். ஒருநாள்கூட அவர் விடுப்பு எடுத்துக்கொண்டது கிடையாது. மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்." எனப் பேசினார்.
மேலும் மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசிய அமித் ஷா, "பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட முறைகள் வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றுள்ளார். எதிர்க்கட்சிகள் வடகிழக்கு மாநிலங்கள் விஷயத்தில் எங்களைக் கேள்விக் கேட்கின்றன. ஆனால் அவர்கள் வடகிழக்கு மாநிலங்களுக்காக இதுவரை என்ன செய்தார்கள்?"
மணிப்பூர் வன்முறை கவலையளிக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் நடைபெறும் அரசியல் வெட்கக் கேடானது. மணிப்பூரில் அதீத வன்முறை நடந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்றுக்கொண்டாலும் கூட எதிர்க்கட்சிகளின் எதிர்வினை அதிக வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததற்கு நாம் ஓர் ஒட்டுமொத்த சமூகமாகத்தான் வெட்கப்பட வேண்டும். அதில் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது.
மே 3 கலவரத்துக்கு முன்னதாக கடந்த 6 ஆண்டுகளில் மணிப்பூரில் ஒருமுறை கூட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அங்கே பந்த் ஏதும் நடந்ததில்லை. சாலை மறியல் கூட நடக்கவில்லை. அண்டை நாடான மியான்மரில் குக்கி இனத்தின் சார்பு கட்சியான குக்கி ஜனநாயக முற்போக்கு கட்சி ஆட்சிக்கு வந்தது. மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்படாமல் இருந்ததால் குக்கி இனச் சகோதரர்கள் மியான்மரில் இருந்து மிசோரத்துக்கும், மணிப்பூருக்கும் வந்தனர். அதுதான் இந்த மோதலுக்குக் காரணம்.

மைத்தேயி சமூகத்தினரை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பதற்றத்துக்கு மேலும் வழிவகுத்தது. மணிப்பூரில் நிலைமை சீராகி வருவதால், யாரும் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்." என அமித் ஷா பேசினார்.
அதைத்தொடர்ந்து, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட இருதரப்பு மக்களிடையே பேசியுள்ளேன். மணிப்பூர் விவகாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு தீர்வு காண வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்ப அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்று மணிப்பூரில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க கோரி நாடாளுமன்ற லோக்சபாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications