முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம்.. நாளை லோக் சபாவில் மசோதா தாக்கல்!
முத்தலாக் மசோதா நாளை லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் செய்யப்பட உள்ளது.
டெல்லி: முத்தலாக் மசோதா நாளை லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் செய்யப்பட உள்ளது.
தலாக் என்று மூன்று முறை சொல்லி பெண்களை இஸ்லாமிய ஆண்கள் விவாகரத்து செய்யும் முத்தலாக் முறைக்கு எதிராக மத்திய பாஜக அரசு கடந்த செப்டம்பர் மாதம் மசோதா தாக்கல் செய்தது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததால் இந்த மசோதா தோல்வி அடைந்தது. இதையடுத்து மத்திய அரசு இதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்து, முத்தலாக் முறைக்கு தடை விதித்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தம் ஒப்புதல் வழங்கினார்.
ஆனால் அவசர சட்டம் ஆறு மாதத்திற்குள் காலாவதியாகிவிடும் என்பதால் இந்த சட்டத்தை மீண்டும் மசோதாவாக தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. நாளை நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாளை இந்த மசோதா சில திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் என்ன மாதிரியான மாற்றங்கள் என்றது முழு விவரம் வெளியாகவில்லை.
நாளை இந்த மசோதா மீது வாக்கு எடுப்பு நடத்தப்பட்டு, பின் இதன் மீது விவாதம் செய்யப்படும். இதனால் நாளைய நாடாளுமன்ற கூட்டம் அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இதனால் நாளை அனைத்து பாஜக எம்.பிக்களும் நாடாளுமன்றத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும் பாஜக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இத்தனை நாட்கள் நாடாளுமன்ற அவை பெரிய குழப்பத்துடன் நடந்தது. பெரிய அமளி நடந்தது. ஆனால் நாளையை அவை சரியாக நடக்க ஒத்துழைப்பு அளிப்போம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. ஆனால் அதிமுக தரப்புதான் அதிகம் அமளி செய்வதால், நாளை மசோதா சரியாக தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.