பாஜகவின் அதிபர் ஆட்சி திட்டம், செலவு குறையும்...ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த 10 முக்கிய பாயிண்டுகள்!
டெல்லி: நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான விவாதங்கள் களைகட்டி இருக்கின்றன. லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடைபெற்றால் என்ன நன்மைகள் என்பதை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பட்டியலிடுகிறது; பாஜக ஒற்றை ஆட்சி முறை- அதிபர் ஆட்சியை கொண்டுவர துடிக்கிறது என "இந்தியா" கூட்டணி கட்சிகள் குமுறுகின்றன.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான 10 முக்கியமான விஷயங்கள்:

- நாட்டில் 1967-ம் ஆண்டு வரை லோக்சபா தேர்தலுடனேயே அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. 1968-க்குப் பின் சில மாநில சட்டசபைகள் கலைக்கப்பட்டதால் பிந்தைய காலங்களில் ஒரே தேர்தல் சாத்தியம் இல்லாமல் போனது.
- 1983-ல் இந்திய தேர்தல் ஆணையமும் 1999-ல் சட்ட ஆணையமும் லோக்சபா தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களையும் நடத்தலாம் என பரிந்துரைத்தன. ஆனால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
- லோக்சபா மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு வெவ்வேறு கால கட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதனை மாற்றி லோக்சபா, மாநிலங்களின் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் ஒரே தேர்தலாக நடத்துவது என்பதுதான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்'-ன் மைய அம்சம்.
- 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு மட்டும் ரூ60,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. லோக்சபா, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் தேர்தல் செலவு என்பது பெருமளவு குறையும் என்பது மற்றொரு கருத்து.
- லோக்சபா, சட்டசபைகளுக்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறு தேர்தல்களை நடத்துவதால் தேர்தல் பணிகளில் அரசு அலுவலர்கள் அதிகமாக ஈடுபட வேண்டியது இருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற போது 5 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே தேர்தல் பணி செய்ய வேண்டிய நிலைமையாக மாறும்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முழக்கத்தைச் செயல்படுத்துகிற போது மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள் தொய்வில்லாமல் செயல்படுத்தப்படும். சில மாநிலங்களில் தேர்தல்கள் நடக்கும் போது சில மக்கள் நலத் திட்டங்களை அறிவிக்கவும் செயல்படுத்தவும் முடியாமல் போகிறது என்பதும் ஒரு வாதம்.
- அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை செயல்படுத்துவதற்கு முன்னர், நாட்டின் அனைத்து சட்டசபைகளின் ஆயுட் காலம் ஒரே மாதிரியான அரசியல் சாசன திருத்தம் முதலில் கொண்டுவர வேண்டும்.
- லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடைபெற்றால் தேசிய பிரச்சனைகளுக்குதான் முக்கியத்துவம் கிடைக்கும்; மாநிலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயமும் இருக்கிறது.
- லோக்சபா தேர்தலுடன் மாநில தேர்தல்கள் நடைபெறும் போது தேசிய கட்சிகள் அளவுக்கு மாநில கட்சிகளால் தேர்தல் செலவுகளை மேற்கொள்ளவும் முடியாது என்கிற அச்சமும் இருக்கிறது.
- லோக்சபா, சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறும் போது இந்த பாதையானது நாட்டில் அதிபர் ஆட்சி முறை- ஒற்றை ஆட்சி முறைக்கு கொண்டு போய் சேர்த்துவிடும் என்பது பெரும்பாலான கட்சிகளின் அச்சம்.












Click it and Unblock the Notifications