முடிந்தது.. பதவி நீக்கப்படும் மஹுவா மொய்த்ரா எம்பி? சபாநாயகர் கையில் விசாரணை அறிக்கை! அடுத்து என்ன?
டெல்லி: அதானி குறித்து கேள்வி கேட்க தொழிலதிபரிடம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியை பதவி நீக்கம் செய்ய மக்களவை நெறிமுறை குழு பரிந்துரைத்த நிலையில் அதற்கான அறிக்கை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். குறிப்பாக அவர் அதானி விவகாரம் குறித்து பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

அதேபோல் தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கட்சியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் அதானி விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வந்தார்.
இந்நிலையில் தான் அதானி குறித்து பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப மஹுவா மொய்த்ரா எம்பி, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பணம், பல்வேறு பரிசுப் பொருட்களை லஞ்சமாக பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டி புகாரளித்தார்.
இந்த புகார் மீது நாடாளுமன்ற மக்களவை நெறிமுறை குழுவின் விசாரணைக்கு சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார். இந்த குழு பாஜக எம்பி நிஷிகாந்த துபே, ,மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது. மஹுவா மொய்த்ரா கடந்த 2 தேதி நெறிமுறை குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த விசாரணையின்போது மஹுவா மொத்ரா சம்பவம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். இதையடுத்து நெறிமுறைக்கு குழு சார்பில் அறிக்கை தயார் செய்யப்பட்டது. மொத்தம் 479 பக்கங்களை இந்த அறிக்கை கொண்டுள்ளது. அதில் நாடாளுமன்ற இணையதளத்தில் தனது சார்பில் கேள்விகளை கேட்க வெளிநாட்டு தொழிலதிபரை அவர் அனுமதித்துள்ளார். இது நாடாளுமன்ற நெறிமுறைகளை மீறுவதாகும். இதனால் அவரை பதவி நீக்கம் செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மஹுவா மொய்த்ராவை எம்பி பதவியில் இருந்து நீக்கம் செய்ய நெறிமுறைக்குழுவில் உள்ள 10 உறுப்பினர்களில் 6 பேர் ஆதரவு தெரிவித்த நிலையில் 4 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்மூலம் பெரும்பலான உறுப்பினர் பதவி நீக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் விசாரணை அறிக்கையை நாடாளுமன்ற நெறிமுறைக்குழு இன்று மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைத்துள்ளது.
இந்த அறிக்கை மீது ஓம்பிர்லா அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளார். அதாவது மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவியை பறிப்படலாம் என கூறப்படுகிறது. அதன்படி மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டால் மக்களவை நெறிமுறைக் குழுவால் நெறிமுறையற்ற முறையில் செயல்பட்டதாக கூறி வெளியேற்றப்படும் முதல் நபர் என்ற மோசமான பெருமைக்கு அவர் சொந்தக்காரர் ஆவார்.












Click it and Unblock the Notifications