கேங் லீடருக்காக சொகுசு கார் திருட்டு.. காரணம் கேட்டு 'உச்சு' கொட்டிய காவல்துறை! பாசக்கார திருடர்கள்
அரசு மருத்துவமனையில் இந்த பாதிப்புக்கான சிகிச்சை வசதிகள் குறைவான அளவில் உள்ளதாலும், அரசு மருத்துவமனை எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் பலரும் தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர்.
டெல்லி: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தங்களது கேங் லீடரின் சிகிச்சை செலவுக்காக சொகுசு கார்களை திருடிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்தவர் லக்கி. இவருக்கு சொந்தமாக ஒரு குடோன் இருக்கிறது. இந்த குடோனை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்துள்ளார். குடோனில் சபீக், மஜிம் மற்றும் ராம் சஜீவன் மூன்று பேர் பணி செய்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் இவருடைய நண்பர் ஆஷிஷ் என்பவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. லக்கி இந்த அளவுக்கு முன்னேறுவதற்கு காரணம் ஆஷிஷ் கொடுத்த ஐடியாதான். எனவே இவருக்கு உதவ லக்கி முடிவெடுத்துள்ளார்.
அதன்படி ஆஷிஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் என்ன சிகிச்சை செய்தும் இவருக்கு உடல்நலம் சரியாகவில்லை. மறுபுறம் சேமிப்பில் இருந்த பணம் முழுவதும் கரைந்துக்கொண்டே வந்திருக்கிறது. பின்னர் ஒரு உயர்தர மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் ஆஷிஷ் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இதிலிருந்து இவரை எப்படியாவது மீட்டெடுத்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். ஆனால் இதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகும்.
திருப்பூரில் இளைஞர்களை விரட்டிய வடமாநில தொழிலாளர்கள்.. இருவரை கைது செய்த காவல்துறை!
ரத்த புற்றுநோய்
இந்த அளவுக்கு பணத்தை திரட்ட டெல்லியில் கேட்பாரற்று கிடக்கும் கார்கள் அனைத்தையும் தன்னுடைய குடோனுக்கு கொண்டு வந்து அந்த காரில் இருக்கும் உதிரி பாங்களை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வது என்றும், மீதமுள்ளதை பழைய இரும்பு கடையில் போட்டுவிடலாம் எனவும் திட்டமிட்டுள்ளார். இதனை செய்து முடிக்க தன்னுடைய மூன்று ஊழியர்களை பயன்படுத்தியுள்ளார். அதன்படி டெல்லியிலிருந்து ஒவ்வொரு காராக திருடுபோயுள்ளது. திருடப்பட்ட கார்கள் அனைத்தும் சொகுசு கார்கள். பெரும்பாலும் நீண்ட நாட்கள் கேட்பாரற்று கிடக்கும் கார்களைதான் இவர்கள் குறி வைத்து திருடியுள்ளனர் என்பதால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை.
திருட்டு
ஆனால் இந்த திருட்டு சம்பவம் குறித்து டெல்லியின் வாகன திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தெரிய வந்த நிலையில், இவர்கள் நால்வரையும் கைது செய்துள்ளனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, "சமீபத்தில் எங்களுக்கு ஒரு புகார் வந்திருந்தது. அதாவது டொயாட்டா இனோவாவின் கிரிஸ்டா வகை காரின் உரிமையாளர் ஒருவர் ஒரு வாரத்திற்கு வெளிநாட்டிற்கு சென்றிருந்தார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது தனது கார் காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து எங்களுக்கு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணையை தீவிரப்படுத்தினோம்.
கைது
ஏறத்தாழ 50க்கும் அதிகமான சிசிடிவி கேமிராக்களை கொண்டு சோதனை செய்து கடைசியாக லக்கியின் குடோனை அடைந்தோம். அங்கு சோதனை செய்ததில் இனோவா காரை பிரித்துக்கொண்டிருந்த மூவரையும், குடோன் உரிமையாளர் லக்கியையும் கைது செய்தோம். அவர்களிடம் விசாரித்ததில்தான் எங்களுக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அதாவது, இவர்கள் தங்கள் கேங் லீடர் ஆஷிஷுக்காக இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு 50க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடிய இவர்கள் இதிலிருந்து உதிரிபாகங்கள் விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஆஷிஷீன் சிகிச்சை செலவுக்கு கொடுத்துள்ளனர். இவர்களின் நிலை எங்களுக்கு புரிந்தாலும் எங்களுடைய கடமையை நாங்கள் செய்துதான் ஆக வேண்டும்" என்று கூறியுள்ளார்.
சிகிச்சை
ரத்த புற்றுநோய் பொதுவாக லுகேமியா, லிம்போமா, சாற்றுப்புற்று என மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள லட்சக்கணக்கில் பணம் செலவாகும். குறிப்பிட்ட சில அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இதனை சரி செய்யும் அளவில் சிகிச்சை கருவிகள் இருக்கின்றன. ஆனால் இந்த இரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் சிகிச்சைப்பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். எனவே பலரும் தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.