பள்ளி கல்வி+மெட்ரோ ரயில் திட்ட நிதி! முதல்வர் ஸ்டாலினின் பிரதமர் உடனான சந்திப்புக்கு காரணம் இதுதான்
டெல்லி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கிறார். இந்த சந்திப்புக்கு, சமக்ரா சிக்ஷா கல்வி நிதி மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி என இரண்டு காரணங்கள் இருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தை முடித்து திரும்பிய அவர், மேற்குறிப்பிட்ட இரண்டு விஷயங்கள் தொடர்பாக பிரதமரை சந்திக்க இருப்பதாக கூறியிருந்தார். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தேதி கேட்கப்பட்டது. பிரதமர் கடந்த 24ம் தேதி அமெரிக்காவிலிருந்து வந்த நிலையில், இன்று முதல்வரை சந்திக்க தேதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக நேற்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்ட முதலவர், இரவு டெல்லி சென்றடைந்தார். அங்கு, எம்.பிக்கள் டி.ஆர் பாலு, கனிமொழி, கலாநிதிமாறன், திருச்சி சிவா உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பை அளித்திருந்தனர். நேற்றிரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அவர், இன்று காலை 11 மணியளவில் பிரதமரை சந்திக்கிறார்.
கல்வி நிதி: இந்த சந்திப்பில் முக்கியமாக சமக்ரா சிக்ஷா கல்வி நிதி குறித்து முதலமைச்சர் வலியுறுத்த உள்ளார். கடந்த 2018ம் ஆண்டு சமக்ரா சிக்ஷா கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டது தொடக்க கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை ஒருங்கிணைந்த கல்வி திட்டமாக இது இருக்கிறது. 2024-2025 கல்வி ஆண்டுக்காக இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ. 3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் 60% நிதியை மத்திய அரசு 4 தவணைகளாக கொடுக்கும்.
வராத நிதி: முதல் தவணை ஜூன் மாதத்தில் வழக்கமாக விடுவிக்கப்படும். இதற்கான முன்மொழிவுகள் தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஏப்ரலில் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், ஜூன் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் முதல் தவணை விடுவிக்கப்படவில்லை. வராத நிதி குறித்து திமுகவினர் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தனர். முதலமைச்சரும், பிரதமருக்கு இது குறித்து விரிவாக கடிதம் எழுதியிருந்தார். அந்த வகையில் இந்த சந்திப்பின்போது, நிதியை விடுவிப்பது குறித்து பேசப்படுகிறது.
மெட்ரோ ரயில் திட்ட தொகை: கல்வி நிதியை தொடர்ந்து மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கான நிதி குறித்தும் தமிழ்நாடு அரசு சார்பில் கேட்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் தொடங்கப்படும் போது, மத்திய அரசு நிதியளிக்கும் என்று சொல்லப்பட்டது. திட்டத்திற்கு ரூ.63 ஆயிரம் கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நிதியை தர மத்திய அரசு மறுத்துள்ளது.
மாநில திட்டம்: எனவே இந்த திட்டம் முழுக்க முழுக்க மாநில திட்டமாக மாறும் நிலை உருவாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இப்போது 7 கட்டங்களாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அதைவிட வளர்ந்த மாநிலமான தமிழ்நாட்டில் இன்னும் இரண்டாம் கட்டமே முடிக்கப்படவில்லை. எனவே, மத்திய அரசு ஒப்புக்கொண்டதை போல நிதியை ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த கோரிக்கையை முதல்வர், பிரதமருடனான சந்திப்பின்போது முன்வைக்க உள்ளார்.
நீட்: மேற்குறிப்பிட்ட இரண்டு கோரிக்கைகள் தவிர, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு, ஓரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்டவை குறித்து தமிழ்நாட்டின் நிலைப்பாட்டையும் முதல்வர் எடுத்துரைப்பார் என்று சொல்லப்படுகிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டமன் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடித்து, 5 ஆண்டு கால ஆட்சியை முன்மாதிரியாக காட்ட திமுக திட்டமிட்டிருக்கிறது. எனவே இதற்கான நிதி சிக்கல்களை தீர்க்கவே முதல்வர்-பிரதமர் சந்திப்பு நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications