அரசியலமைப்பு கொள்கை நிலைநாட்டப்படும் என்று நம்புகிறேன் - ஜெகதீப் தன்கருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
டெல்லி: இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெகதீப் தன்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிகாலம் முடிவடைய இருப்பதால் 14 வது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

வேட்பாளர்கள்
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிட்டார். இந்த நிலையில் இன்று டெல்லியில் நாடாளுமன்றத்திலும் மாநில தலைமைச் செயலகங்களிலும் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்து மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலையிலிருந்தே வாக்குகளை செலுத்தினர். 5 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

ஜெகதீப் தன்கர் வெற்றி
அதன் தொடர்ச்சியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 725 பேர் வாக்களித்தனர். 92.94% வாக்குகள் பதிவாகின. பாஜக வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளையும் மார்க்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்று உள்ளார். 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இதுகுறித்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். ராஜ்ய சபாவில் விவாதங்களை வலுப்படுத்துவதோடு அரசியலமைப்பு கொள்கைகள் நிலைநாட்டப்படும் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications