ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர்.. முதல்வர் பதவியேற்பில் ஒரே நாளில் "ஹாட்ரிக்" .. பிரமிக்க வைத்த காங்.!
Recommended Video

டெல்லி: மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் இன்று புதிய முதல்வர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். காங்கிரஸ் கட்சி இதற்காக மூன்று மாநிலங்களிலும் பெரிய விழாவை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
நடந்த முடிந்த 5 மாநில தேர்தல்களில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி கைப்பற்றி உள்ளது. இதற்கிடையே, ராகுல் காந்தியின் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில், நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு புதிய முதல்வர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இன்று பதவியேற்பு
மத்தியப் பிரதேச முதல்வராக அந்த மாநில மூத்த தலைவர் கமல்நாத் பெயர் அறிவிக்கப்பட்டது. அதே போல், ராஜஸ்தானில் அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சட்டீஸ்கரில் காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பகேல் முதல்வரானார்.

முதல்வர் அசோக் கெலாட்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பர்ட் மண்டபத்தில் காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா நடந்தது. இதில், முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். பதவியேற்பு விழாவில் , காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிற்பகலில் பதவியேற்பு
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள ஜம்பூரி மைதானத்தில் இன்று மதியம் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதல்வராக கமல்நாத் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். அதே போல், ராஜஸ்தானில் முதல்வராக பதவியேற்றுள்ள அசோக் கெலாட், துணை முதல்வரான சச்சின் பைலட் ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

பூபேஷ் பகேல் பதவியேற்பு
சட்டீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பகேல், ராய்ப்பூரில் மாலை 6.30 மணிக்கு பதவி ஏற்றார். மழை காரணமாக பதவி ஏற்பு 2 மணி நேரம் தாமதம் அடைந்தது. எனினும், இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். சட்டீஸ்கர் கவர்னர் ஆனந்தி பென் பாட்டீல் பூபேஷ் பாகலுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.












Click it and Unblock the Notifications