Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அருந்ததி ராய் முதல் அரவிந்த் வரை சிறையில்..உங்க சரிவு காலம் ஆரம்பிச்சுருச்சு! பாஜகவை பதற வைத்த சு.வெ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பல இடங்களிலே எழுத்தாளர் அருந்ததிராய் துவங்கி அரவிந்த் கெஜ்ரிவால் வரை அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும், இந்தத் தேர்தலின் மூலம் பாஜகவின் சரிவு ஆரம்பமாகிவிட்டது என மதுரை நாடாளுமன்ற எம்பி சு.வெங்கடேசன் ஆவேசமாகப் பேசினார்.

நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரில் நேற்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய ராகுல் காந்தி பாஜகவினரையும் , பிரதமர் நரேந்திர மோடியையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

Su Venkatesan Parliament Narendra Modi

இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோரும் பாஜக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அந்த வகையில் நாடாளுமன்றத்தில் பேசிய மதுரை எம்பி சு.வெங்கடேசன், இந்தத் தேர்தலின் மூலம் பாஜகவின் சரிவு ஆரம்பமாகிவிட்டது என ஆவேசமாகப் பேசினார்.

அந்த உரையில்," 18 வது நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச அரசியலுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கும், மதுரை நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கும் எனது அன்பான வணக்கத்தையும் , நன்றியையும் முதலிலே தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாடாளுமன்றத் தேர்தலின் தீர்ப்பை உள்வாங்கிக் கொண்டதாக இந்த அரசினுடைய உரை அமையவில்லை . குறிப்பாகச் சொல்லுவதாக இருந்தால் இந்தத் தீர்ப்பு ஆளுங்கட்சியினுடைய 63 எம்.பிக்களை குறைத்திருக்கிறது.

அவர்களது கார்பரேட் நண்பர்கள் கட்டமைத்த கருத்துக் கணிப்புக் ( Exit Poll ) கற்பனைகளைத் தகர்த்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் தெய்வக் குழந்தை சொன்ன பல கதைகளை மக்கள் பொய்யென நிரூபித்திருக்கிறார்கள். இவ்வளவு நல்ல ஒரு தீர்ப்பை 18 வது நாடாளுமன்றத்தில் மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதைவிட முக்கியம் உங்கள் கைகளில் பெரும்பான்மையைக் கொடுத்தால் எங்கள் கைகளில் வாக்களிக்கும் உரிமை கூட இருக்காது என்கிற அச்சத்தை இந்திய மக்கள் வெளிப்படுத்தி இருப்பது தான் இந்தத் தேர்தலினுடைய தீர்ப்பு.

நண்பர்களே 17 வது நாடாளுமன்றத்தினுடைய கடைசி நாளில் பிரதமர் இந்த அவையில் பேசிய பேச்சை நான் நினைவுபடுத்த வேண்டுமென்று நினைக்கிறேன். " தேர்தலுக்குப் பிறகு இந்த அவையில் எதிர்கட்சிகளுக்கு இடமில்லை ; பார்வையாளர் மாடத்தில் தான் எதிர்கட்சிகளுக்கு இடம் " என்று பேசினார். ஆனால் இன்றைக்கு எதிர்கட்சித் தலைவரின் உரையை இரண்டு மணி நேரம் உட்கார்ந்து கேட்க வைத்திருக்கிற பெருமையை இந்திய வாக்காளர்கள் நிலைநிறுத்தியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல எந்த விவசாயிகளுடைய டிராக்டர்கள் டெல்லிக்குள் வரக்கூடாது என்று இந்த அரசு உத்தரவு போட்டதோ , இன்றைக்கு அதே விவசாயப் போராட்டத்தின் தலைவர் எங்கள் அன்புத் தோழர் அம்ராராம் டிராக்டரிலே உள்ளே வந்து பதவிப் பிரமாணத்தை எடுத்திருக்கிறார் என்பதை இங்கே நான் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். பிரதமருடைய அன்றையப் பேச்சு முழுக்க முழுக்க அயோத்தியைப் பற்றி இருந்தது. ஆனால் இன்றைக்கு குடியரசுத் தலைவரின் உரையில் அயோத்தி என்ற சொல்லே இல்லை.

உங்களுக்கு வாக்களிக்காவிட்டால் அயோத்தியையும் கைவிடுவீர்கள் , ஆண்டவனையும் கைவிடுவீர்கள் என்பது தான் குடியரசுத் தலைவர் உரையின் மூலம் இந்த நாட்டு மக்களுக்கு சொல்லியுள்ள செய்தி . இன்றைக்குத் தான் அயோத்தியைப் பேச வேண்டும். ஒரு பொதுத் தொகுதியில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த அவதேஷ் பிரசாத் என்ற நாடாளுமன்ற உறுப்பினரை மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். எவ்வளவு அழகான ஒரு ஜனநாயகத்தின் தீர்ப்பு . கோயில்களை வாக்குச் சாவடியின் வாசலாக பாஜக பார்க்கிறது. கோயில்கள் வாக்குச் சாவடிகளின் வாசல்கள் அல்ல , அது ஆன்மீகத்தின் உறைவிடம் என்பதை உங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள் அயோத்தி மக்கள்.

அதுமட்டுமல்ல நண்பர்களே , அயோத்தியினுடைய ராமர் உங்களை கைவிட்டார். வாரணாசியிலே காசி விசுவநாதர் முதல் மூன்று சுற்று உங்களை தவிக்கவிட்டார். தெய்வத்தின் குழந்தை என நீங்கள் சொல்லியதை மனிதர்களான எங்களாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. தெய்வங்களால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? எனவே தான் நீங்கள் ராமரைக் கைவிட்டு விசுவநாதரிடம் போனீர்கள்; விசுவநாதரிடமிருந்து இன்றைக்கு ஜெகன்நாதரிடம் போயிருக்கிறீர்கள். விரைவில் ஜெகன்நாதர் உங்களுக்கு நல்ல அருளை பாவிப்பார்.

இங்கே அமைச்சர்கள் எல்லாம் பேசினார்கள். மீண்டும் செங்கோலோடு எங்களது பிரதமர் மோடி நாடாளுமன்ற அவைக்குள் நுழைந்திருக்கிறார் என்று அமைச்சர்கள் பெருமையோடு பேசியிருக்கிறார்கள். செங்கோல், மணிமுடி, சிம்மாசனம் இதையெல்லாம் தகர்த்துவிட்டுத் தான் இந்திய ஜனநாயகம் இந்த அவையிலே கால் ஊன்றியது. மன்னராட்சி எப்பொழுது ஒழிந்ததோ அப்பொழுதே செங்கோலின் மகிமையும் ஒழிந்துவிட்டது.

செத்துப் போன சிங்கத்தின் தோலை போர்த்திக் கொண்டு காட்டுக்கு ராஜா நான் தான் என்று நீங்கள் கதையடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியுமா? இந்த செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தனது அந்தப்புரத்திலே எத்தனை பெண்களை அடிமையாக வைத்திருந்தான் என்று? இந்த செங்கோலை கொண்டு வந்து இந்த இடத்திலே வைத்ததன் மூலம் இந்த நாட்டுப் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? வேதனையாக இருக்கிறது. இந்த இடத்திலே நாங்கள் மீண்டும் பதிவு செய்ய விரும்புகின்றோம்.

நாடாளுமன்றத்தினுடைய நுழைவு வாசலில் தேசத்தந்தை காந்தியின் சிலை இருந்தது. நாடாளுமன்றத்தின் முன்புறம் அண்ணல் அம்பேத்கரின் சிலை இருந்தது. இன்றைக்கு அவைகளெல்லாம் காணவில்லை. நாடாளுமன்றத்தின் பின்புற வாசலிலே காந்தியைக் கொண்டு போய் வைத்திருக்கிறீர்கள். அம்பேத்கரைக் கொண்டு போய் வைத்திருக்கிறீர்கள்.ஆனால் சாணக்கியரையும், சாவர்க்கரையும் செங்கோலையும் நாடாளுமன்றத்திற்குள்ளே வைத்திருக்கிறீர்கள்.

ஆளுங்கட்சிக்காரர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வோம். நாங்கள் அரசியல் சாசனத்தை கையிலே ஏந்தியபடி பதவி ஏற்றுக்கொண்டோம். ஏன் தெரியுமா? உங்களால் எது அழிக்கப்பட இருக்கிறதோ அதை உயர்த்திப்பிடிக்கத் தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். நீங்கள் எதை அழிக்க நினைக்கிறீர்களோ நாங்கள் அதை உயர்த்திப் பிடிப்போம். அதேபோல செங்கோல் இரண்டு செய்தியின் குறியீடு. ஒன்று மன்னராட்சியின் குறியீடு. அதேபோல இரண்டாவது குறியீடு அறம் . நேர்மையின் குறியீடு. உங்களுக்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.

தமிழ்நாட்டு தேர்தலுக்கு எட்டு முறை பிரதமர் வந்தார். தமிழ்நாட்டின் பெருமையை , தமிழ்மொழியின் பெருமையை , தமிழ்பண்பாட்டின் பெருமையைப் பேசினார். தேர்தல் முடிந்தது உத்தரப் பிரதேசத்திலே போய் தமிழர்களைப் பற்றி நீங்கள் என்ன பேசினீர்கள் ? பீகாரிலே என்ன பேசினீர்கள் ? ஒரிசாவிலே என்ன பேசினீர்கள் ? உங்களுக்கு அந்த அரசியல் அறமும் , நேர்மையையும் இருந்திருந்தால் நீங்கள் அதைத் தமிழ்நாட்டில் பேசியிருக்க வேண்டும். எந்த ஆட்சியாளரும் இவ்வளவு இழிவாகத் தமிழர்களை பேசியதில்லை.

அதேபோல சிறுபான்மை மக்களை ஊடுருவல்காரர்கள் என்று , அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறவர்கள் என்று செல்வத்தை அபகரிக்கிறவர்கள் என்று நீங்கள் பேசுகிறீர்கள் . தொடர்ந்து இதையெல்லாம் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொண்டிருந்தது. அதேபோல இன்றைக்குத் தேர்தலுக்குப் பிறகு நீட் தேர்வு பிரச்சனை . ஏறக்குறைய கோச்சிங் மாபியாக்கள் தேர்தல் முகமைகளை தங்கள் கைகளிலே வைத்திருக்கிறார்களோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள். அதைப்பற்றி கல்வி அமைச்சர் பேச மறுக்கிறார்.

ரயில் விபத்தைப் பற்றி ரயில்வே அமைச்சர் பேச மறுக்கிறார். மணிப்பூர் வன்முறைகளைப் பற்றி உள்துறை அமைச்சர் பேச மறுக்கிறார் . ஆனால் அதற்குப் பதிலாக தேர்தலுக்குப் பிறகு இந்தியாவின் பல இடங்களில் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அதேபோல பல இடங்களிலே எழுத்தாளர் அருந்ததிராய் துவங்கி அரவிந்த் கெஜ்ரிவால் வரை அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவை நிறுத்தப்பட வேண்டும்.

இந்தத் தேர்தலின் மூலம் உங்களது சரிவு ஆரம்பமாகிவிட்டது. 63 இடங்களை மக்கள் பறித்தார்கள் என்பது மட்டுமல்ல , உங்கள் தோழமைக் கட்சிகளையே நீங்கள் மதிக்கப் பழகிவிட்டீர்கள் . 12 எம்பிக்கள் கொண்ட கட்சிக்கு பிரதமர் எழுந்து நின்று வணக்கம் சொல்கிறார். அது இந்த நாட்டின் தலைப்புச் செய்தியாக மாறுகிறது. ஜனநாயகத்தின் குரல் , சமூகநீதியின் குரல், பொருளாதார நீதியின் குரல் தான் இந்தியாவின் குரல் என்பதை மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபிப்பார்கள்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+